உள்ளூர் செய்திகள்

பி.யு.சி., துணை தேர்வு முடிவு

கர்நாடகாவில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., துணை தேர்வு மே 23ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை, 304 மையங்களில் நடந்தது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 881 மாணவ, மாணவியர் துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 756 பேர் எழுதினர். மொத்தம் 10 மையங்களில் ஜூன் 9 முதல் 14ம் தேதி வரை 3,401 ஆசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்தினர். இந்நிலையில் துணை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 28 ஆயிரத்து 901 மாணவர்கள் 21 ஆயிரத்து 577 மாணவியர் என 50 ஆயிரத்து 478 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 32 சதவீதம் ஆகும்.தேர்வு எழுதிய மாணவர்களில் 30.22 சதவீதம் பேரும், மாணவியரில் 34.74 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியரின் தேர்ச்சி சதவீதம் அதிகம். நகர பகுதிகளில் 32.69 சதவீதமும், கிராம பகுதிகளில் 29.37 சதவீதமும் தேர்வாகி உள்ளனர். கன்னட வழியில் படித்த வர்களில் 29.54 சதவீதம் பேரும், ஆங்கில வழியில் படித்தவர்களில் 35.10 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.தேர்வு முடிவுகள் http://kseab.karnataka.gov.in, https://karresults.nic.in என்ற இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தந்த கல்லுாரி தகவல் பலகையில் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் தேவைப்படுவோர், இம்மாதம் 26ம் தேதிக்குள், பாடம் ஒன்றுக்கு, 530 ரூபாய் செலுத்தலாம். வரும் 24 முதல் 28ம் தேதி வரை இணையதளத்தில், விடைத்தாள்களை பதவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் பாடம் ஒன்றுக்கு 1,670 ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் எடுத்து கொள்பவர்களுக்கு மட்டுமே மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 080 23310075/76 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேர்வு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்