இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பள்ளி இடைநின்ற மாணவர்கள் மூவர் மீண்டும் பள்ளிக்கு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த மு.புதுார் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி வராமல் இருப்பதும், ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கள ஆய்வின் போது பலமுறை வலியுறுத்தியும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.கலெக்டர் உத்தரவின் பேரில், போலீசார் உதவியோடு நேற்று கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் மாணவர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து பள்ளியில் படிப்பதற்கு, தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம் என உறுதியளித்தனர்.அப்போது 3 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதாக உறுதி அளித்தனர். இந்த ஆய்வின் போது மு.பரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் அந்தோணி, பட்டதாரி ஆசிரியர் வேல்முருகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், வரதராஜ பெருமாள், சமூக ஆர்வலர் சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த கள ஆய்விற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.