வேளாண் பல்கலை மாணவர்கள் ஆர்வம்
திருப்பூர்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், இறுதியாண்டு படிக்கும் வேளாண மாணவர்கள், 'கிராம தங்கல்' திட்டத்தில், பொங்கலுார் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடி, வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு மாணவர்கள் குழுவினர் சென்று, காய்கறிகளை விற்பனை செய்யும் முறை, நிர்ணயிக்கும் விலை, வாடிக்கையாளர்களை அணுகும் முறை உள்ளிட்ட விஷயங்களை அனுபவ ரீதியாக உணர்ந்துக் கொண்டனர்.முன்னதாக, அதிகாலை 1:30 மணிக்கு, அறுவடை செய்யப்பட்ட தக்காளியை, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தரம் பிரித்து, பெட்டிகளில் அடுக்கி, லாரிகளில் ஏற்றி உழவர் சந்தை சென்றனர். உழவர் சந்தை அலுவலர்களுடன் கலந்துரையாடி சந்தையின் நிர்வாக அமைப்பு, வசதிகள், நேரடி விற்பனை மற்றும் இடைத்தரகர் இல்லாமல் சந்தையை அணுகும் முறை குறித்து அறிந்து கொண்டனர்.