உள்ளூர் செய்திகள்

மூடும் அபாயத்தில் தமிழ் பல்கலைக்கழகம்!

தஞ்சாவூர்: 'தமிழ் பல்கலைக்கழகம் மூடும் அபாயத்திற்கு சென்றுக்கொண்டு இருக்கிறது' என, தமிழ் பல்கலைக்கழக காப்பு இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது.தஞ்சாவூரில், தமிழ் பல்கலைக்கழக காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால், மொழி, இனம், மானுடவியல் போன்ற பன்முகத் தன்மைகளை ஆராயும் நோக்கில், 972 ஏக்கர் பரப்பளவில், தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ​ தற்போது, இப்பல்கலைக் கழகம், நிர்வாக மற்றும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாகத் துணைவேந்தர், பதிவாளர் பதவி காலியாக உள்ளது. தகுதி இல்லாத துறைத் தலைவர்கள் தான் உள்ளனர். இதனால், ஆய்வுப்பணிகள் முடங்கியுள்ளன.நாடகத்துறை மற்றும் பதிப்பகத்துறை போன்றவை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தற்போது பதிப்பகம் மூடப்பட்டு, ஆய்வுப் பணிகள் பெருமளவு குறைந்துள்ளன. பதிப்பகம் மற்றும் நுாலகத்திற்கு ஒரு இயக்குநர், துணை இயக்குநர், ஆறு உதவி நுாலகர்கள் இருந்தனர். தற்போது யாரும் இல்லை. புதிய நுால்கள், பருவ இதழ்கள் வாங்குவது இல்லை.பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான 972 ஏக்கரில், தற்போது வனத்துறை, கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் போன்ற பிற தேவைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, பல்கலைக்கழகத்தின் வசம் மிகக் குறைந்த அளவே நிலம் உள்ளது. மேலும், சோழர்கள் அருங்காட்சியகம் அமைக்க, 55 ஏக்கர் எடுக்கப்பட்டுள்ளது. இனி வருங்காலத்தில் இந்த பல்கலைக் கழகத்துக்கான இடத்தை யாரும் அபகரிக்க கூடாது.உயர்கல்வித் துறையின் கீழ் இருக்க வேண்டிய இப்பல்கலைக்கழகம், தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் உள்ளது. இதனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இப்பல்கலைக்கழகம் மூடும் அபாயத்திற்கு சென்று வருகிறது. உடனே பல்கலைகழகத்தை, மேம்படுத்த, தகுதியான துணைவேந்தர் மற்றும் பதிவாளரை நியமிக்க வேண்டும். ​பல்கலைக்கழகத்தை மீண்டும் உயர்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். ​ராஜராஜன் விருது போன்ற விருதுகளை மீண்டும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, எங்களின் இயக்கம் சார்பில், ஜூன் மாதம் முதல் அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் போராட்டங்களும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்