பட்டப்படிப்புடன் ஏ.ஐ., கற்றல் அவசியம்
சென்னையில் நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் பலராமன் ரவீந்திரன், 'உலகை ஆளும் தொழில் நுட்பங்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது:பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அனைவரும், ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்பம்; ஏ.ஐ., மட்டுமே படிக்க வேண்டும் என்று நினைத்தால், எதிர்காலத்தில் நாம் சில சவால்களை சந்திக்க நேரிடும்.உற்பத்தி துறையிலும், கட்டுமான துறையிலும், மனித வள தேவைகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து துறைகளிலும், வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள், குறைந்து வருவதாகப் பேசுகின்றனர். அப்படி எதுவும் நடக்காது.புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து, மாணவர்கள் கற்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில், பெட்ரோலியம் மற்றும் சுரங்கம் சார்ந்த துறைகளிலும், ஏ.ஐ., பயன்பாடு அதிகரித்துள்ளது.எனவே, மாணவர்கள், தாங்கள் எந்த துறைகளை தேர்வு செய்து படித்தாலும், அதில் எப்படி ஏ.ஐ.,யை பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இன்ஜி., துறையின் எதிர்காலம் எப்படி? ஏ.ஐ.சி.டி.இ., முன்னாள் தலைவர் சீதாராமன், 'தொழிற்கல்வியில் உள்ள எதிர்காலம்' என்ற தலைப்பில் பேசியதாவது: நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை, 29.5 சதவீதமாக உள்ளது. இதை, 2035ம் ஆண்டுக்குள், 50 சதவீதமாக உயர்த்த, 'தேசிய கல்விக் கொள்கை 2020' வலியுறுத்துகிறது. ஆனால், நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழகம் இந்த இலக்கை கடந்துள்ளது. தொழிற்கல்வியின் எதிர்காலம், வரும் நாட்களில் மாற்றங்களை சந்திக்கும். குறிப்பாக, பட்டப்படிப்பு அடிப்படையிலான கல்வியில் இருந்து, திறன் அடிப்படையிலான கல்விக்கு மாறும். மேலும், வாழ்நாள் முழுதும் கற்றல் என்பது அவசியமாகி வருகிறது. பணியாற்றும் போதே, உயர்கல்வி படிக்கும் வகையில், ஒருங்கிணைந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், மின்சார வாகனம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம்; திறன்மிகு உள்கட்டமைப்புகள் மற்றும் நகரங்கள்; விண்வெளி தொழில்நுட்பம்; உயிரி பொறியியல் மற்றும் சுகாதார தொழில்நுட்பம்; குவான்டம் கம்ப்யூட்டிங் போன்ற இன்ஜினியரிங் துறைகள் முக்கியத்துவம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.