டாக்டர்களை பாராட்டிய பள்ளி மாணவர்கள்
கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர்கள், பி.எஸ்.ஜி., மற்றும் கே.ஜி., மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மருத்துவர்களுக்கு மலர்க்கொத்து, வாழ்த்து அட்டைகளை வழங்கி நன்றியை தெரிவித்தனர்.கே.ஜி., மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பக்தவத்சலத்துடன் மாணவர்கள் கலந்துரையாடினர். அப்போது, அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் கொண்டு உயர்கல்வியை தேர்வு செய்ய வேண்டும். மருத்துவ துறையினருக்கு மரியாதை செலுத்தும் நற்பண்பை மாணவர்களிடையே வளர்த்த பள்ளி நிர்வாகம் பாராட்டுக்குரியது, என தெரிவித்தார்.இதனை தொடர்ந்து, பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர், மருத்துவமனையின் இதயவியல் மற்றும் எலும்பியல் துறைகளை பார்வையிட்ட மாணவர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடினர். அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.