காமன்வெல்த் வெற்றியாளர்களுக்கு இலவச கல்வி
சமீபத்தில் டெல்லியில் நடந்துமுடிந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளின் முழு செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலவுகள் முறையே சி.பி.எஸ்.இ. மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு போன்ற அமைப்புகளால் ஏற்கப்படும். இதன்மூலம் டெல்லி - 2010 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற அதிக வீரர் - வீராங்கனைகள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு இலவச கல்வியை வழங்கும் செயல்முறை பற்றி திட்டமிட, யு.ஜி.சி. ஏற்கனவே ஒரு கமிட்டியை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம். மேலும் வருடாந்திர தேசிய சி.பி.எஸ்.இ. விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த மாணாக்கருக்கு தலா ரூ.6000 மதிப்பு கொண்ட "சாச்சா நேரு விளையாட்டு விருதை" சி.பி.எஸ்.இ. ஏற்கனவே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.