விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு 13ம் தேதி பரிசளிப்பு விழா!
காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்தில் 98 அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது. அனைத்து கழகத்தையும் சேர்த்து ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில், ஒன்றியத்தை சேர்ந்த 88 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, விளையாட்டு போட்டிகள், பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தியது. இதில் தொடக்க பள்ளியை சேர்ந்த 177, நடுநிலை பள்ளியை சேர்ந்த 55 மாணவர்கள் பங்கேற்றனர். நடுநிலை பள்ளிகளுக்கிடையேயான தொடர் ஓட்டத்தில் தமிழ்செல்வி, திலீப்குமார் ஆகியோரும், 200 மீட்டர் ஓட்டத்தில் சிவக்குமார், திலீப்குமார், ரதி, முனீஸ்வரி ஆகியோரும் முதல் பரிசு பெற்றனர். தொடக்க பள்ளி அளவில் 100 மீட்டர் ஓட்டத்தில் மனோகரன், கலா, ச.நாகராஜ், கு.பிரியதர்ஷினி, தினேஷ், காளியம்மாள், சூர்யா, அழகு மீனாள், முத்து பழனி, நிவேதா, மணிகண்டன், நிலோபர் நிஷா, ஆனந்த், புவனேஸ்வரி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். பரிசளிப்பு விழா, வரும் 13-ம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடக்கிறது. சிங்கம்புணரி: உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சரக விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள 24 மேல்நிலை, உயர்நிலை, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஆதிரெத்தினம் துவக்கி வைத்தார். கபடி, டென்னிஸ்,ஹாக்கி,வாலிபால் குழு விளையாட்டுக்கள் நடந்தது. தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் நடக்கும் போட்டிக்கு 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தகுதி பெற்றனர். உடற்கல்வி ஆசிரியர் இன்பராஜ் பொன்னுத்துரை, ஆசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.