ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 20 ஆயிரம் இடங்கள் காலி
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, மொத்தம் 21 ஆயிரத்து 595 இடங்களை கவுன்சிலிங் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை திருச்சியில் நடந்த கவுன்சிலிங்கில், 11 ஆயிரத்து 609 இடங்கள் மட்டுமே நிரம்பின; 9,986 இடங்கள் காலியாக இருந்தன. அறிவியல் பிரிவில் மட்டும் 9,986 இடங்களை நிரப்ப விண்ணப்பங்களே இல்லாத நிலை ஏற்பட்டது. கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் உள்ள இடங்களை நிரப்ப, கடந்த மாத இறுதியில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. 2,143 பேருக்கு கவுன்சிலிங் கடிதம் அனுப்பப்பட்டதில், மிகக் குறைவான மாணவர்களே வந்ததாகவும், அவர்களில் 600 பேருக்கு மட்டுமே சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், கவுன்சிலிங் இடங்கள் 9,000 வரை காலியாக இருக்கின்றன. தனியார் பள்ளிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழுள்ள இடங்களில் 11 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கலாம் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவர் சேர்க்கை பட்டியல் வந்ததும், இது குறித்த புள்ளி விவரம் தெரிய வரும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு, ஜூலை 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்த தேதிக்குள் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியலை அனுப்புமாறு ஆசிரியர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் முதல்வர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளிடம் இருந்து மாணவர் சேர்க்கை பட்டியலை பெற்று வருகின்றனர். மாணவர் சேர்க்கைக்கான துறையின் ஒப்புதல் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஜூலைக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.