உள்ளூர் செய்திகள்

பாலியல் வழக்கில் சிக்கிய 255 ஆசிரியர்கள் கல்வி சான்றுகளை ரத்து செய்ய நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, 255 பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.சமீப காலமாக, பள்ளி ஆசிரியர்கள், மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவி, அப்பள்ளி ஆசிரியர்களாலேயே, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறையில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, பள்ளி தாளாளரின் கணவர் உட்பட ஐந்து பேர் கைதாகி உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள், பெற்றோரிடம் பயத்தை ஏற்படுத்தி உள்ளன.இதுகுறித்து, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.இது தொடர்பான அரசாணை, ஏற்கனவே, 2012 மே 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக் கேடான முறையில் நடந்து கொள்ளும், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற தண்டனை வழங்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடாத வகையில், தகுந்த உளவியல் ஆலோசகர்கள் வழியே, அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.இருப்பினும், அதன்படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, அந்த அரசாணையின்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகம் முழுதும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அறிக்கையாக அளிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, பாலியல் குற்ற வழக்குகளில் சிக்கிய, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், தொடக்க கல்வி துறையில் 80; பள்ளிக்கல்வி துறையில், 175 என, மொத்தம், 255 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.அவர்கள் மீதான குற்றச்சாட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து நாளை பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆய்வு செய்ய உள்ளார். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின், அனைத்து கல்வி சான்றிதழ்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்