தசரா ஓவிய போட்டி 325 மாணவர்கள் உற்சாகம்
மைசூரு: தசரா விழாவின் ஒரு அங்கமாக நடந்த மாநில அளவிலான ஓவிய போட்டியில், 325 மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.தசரா விழாவை ஒட்டி, மைசூரு கலா மந்திராவில் மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவிய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதை மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா நேற்று துவக்கிவைத்தார்.ஓவிய போட்டியில், 110 பேர் பங்கேற்ற, 1 - 4ம் வகுப்பு மாணவர்கள், சுற்றுச்சூழல், வன விலங்குகள், மைசூரு தசரா போன்றவை குறித்தும்; 111 பேர் பங்கேற்ற 5 - 7ம் வகுப்பு மாணவர்கள், விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மைல் கல் போன்றவை குறித்தும்; 104 பேர் பங்கேற்ற 8 - 10ம் வகுப்பு மாணவர்கள், கர்நாடகாவின் பாரம்பரிய சுற்றுலா தலங்கள் குறித்தும் ஓவியங்கள் வரைந்தனர்.மொத்தம் 325 மாணவர்கள் பங்கேற்றனர். கலா மந்திராவில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் ஓவியம் வரைந்தனர். பெரும்பாலானோர் தங்கள் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருடன் வந்திருந்தனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 22ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.