நீர்வளத்துறை செயற்பொறியாளர் பணி 60 காலியிடங்களை நிரப்புவது இழுபறி
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளால், 60 நீர்வளத்துறை செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் பணி இழுபறியாக உள்ளது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், பொதுப்பணி துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. அமைச்சர், துறையின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். பொதுப்பணி துறையில் இருந்து நீர்வளத்துறைக்கு மாற விரும்பியவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.அதேநேரத்தில், துறை பிரிப்பால், தங்களது, பதவி உயர்வு பாதிப்பதாக கூறி, நீதிமன்றத்தில் எட்டு பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, 30க்கும் மேற்பட்ட செயற்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, கண்காணிப்பு பொறியாளராக கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டனர்.ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயர்வு காரணமாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மதிப்பீடு தயாரித்தல், பணிகளை கண்காணித்தல் போன்றவற்றை, செயற்பொறியாளர்கள் செய்து வருகின்றனர்.காலி பணியிடங்கள் காரணமாக, அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் சீரமைப்பு, தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதித்துறை ஒப்புதல் பெறுவது தாமதமாகி வருகிறது.அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இனியாவது, வழக்கை முடித்து பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர்கள் வலியுறுத்திஉள்ளனர்.