மாணவனுக்கு திருக்குறள் விருது
அவிநாசி: திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியில் வெற்றி பெற்று, பார்லிமென்டில் நடந்த விழாவில் பரிசு பெற்ற, தெக்கலூர் மாணவனை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். பா.ஜ., - எம்.பி., தருண் விஜய், திருவள்ளுவர் இளைஞர் மன்றத்தை நடத்தி வருகிறார். அதன் சார்பில், கடந்த மாதம் மதுரையில், திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது. 300 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; 133 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், அவிநாசி அடுத்த தெக்கலூரை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஹரிகிருஷ்ணனும் ஒருவர். இவர், எம்.நாதம்பாளையத்தில் உள்ள அவிநாசி கல்வி நிலையத்தில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். 17ல் பார்லிமென்டில் நடந்த விழாவில், அவருக்கு திருக்குறள் செல்வர் என்ற விருதை, எம்.பி., தருண் விஜய் வழங்கினார். விருது பெற்ற ஹரிகிருஷ்ணனுக்கு, அவிநாசி கல்வி நிலைய அறக்கட்டளை அறங்காவலர்கள், தலைமையாசிரியை வேலுமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டு தெரிவித்தனர்.