நுாலகத்துறையிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்
விருதுநகர்: விருதுநகர் கல்லுாரி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுாலகத்தை நுாலகத்துறையின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.விருதுநகரில் சமூக ஆர்வலர் பரத் ராஜா, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: விருதுநகர் கல்லுாரி ரோட்டில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் நினைவு மணிமண்டபம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நுாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.அது திறக்கப்பட்டால் அதன் செயல்பாடு நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. அரசாங்கத்தில் ஏற்கனவே நுாலகத்திற்கு என தனியாக நுாலகத்துறை செயல்படுகிறது.அப்படி இருக்கும் போது இந்த நுாலகத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் சிறப்பாக செயல்படுத்த வாய்ப்பு கிடையாது. ஏற்கனவே உள்ளாட்சி துறையில் ஒப்படைத்த பல்வேறு நுாலகங்கள் நிதி பற்றாக்குறை, ஆள் இல்லாமல் செயல்படாது உள்ளன. எனவே இந்த நுாலகத்தை நுாலகத்துறையின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும், எனக் கேட்டுள்ளார்.