தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டுகள் சிறை
பெலகாவி: தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை, கர்நாடகா சட்டசபையில் அரசு தாக்கல் செய்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கர்நாடகாவில் காலியாக உள்ள 545 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப, 2021ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன.தேர்வர்கள் சட்டவிரோதமாக தேர்வு எழுதி வெற்றி பெற, போலீஸ் அதிகாரிகளே உடந்தையாக இருந்தனர். கடந்த அக்டோபர் 28, 29ம் தேதிகளில், கர்நாடக அரசின் பல்வேறு வாரியங்களில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப நடந்த, தேர்விலும் முறைகேடு நடந்தது.இதையடுத்து, தேர்வு முறைகேடுகளை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், பெலகாவியில் நடந்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின், நான்காவது நாள் கூட்டம் நேற்று நடந்தது.இதில், கர்நாடகா பொது தேர்வு 2023 என்ற பெயரில், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும், சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு பின் சட்டமாகும்.