அரசு கல்லூரிகளில் 2 வது ஷிப்ட் குழப்பம்
அரசு கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, கடந்த தி.மு.க., ஆட்சியில் ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது ஷிப்ட் ல், பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு 125 ரூபாய் வழங்கப்பட்டது. மதிப்பூதியத்தை 200 ரூபாயாக உயர்த்த ஆசிரியர்கள் வலியுறுத்திய நிலையில், 2009 செப்டம்பரில், இரண்டாவது ஷிப்ட் க்கு, 1661 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 6,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இரண்டாவது ஷிப்டில், அனைத்து பாடப்பிரிவுகளையும் துவக்க உத்தரவிட்ட நிலையில், கவுரவ விரிவுரையாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதில், 2000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் தேவை. ஆனால் 1661 பேர் மட்டுமே இருந்ததால், வகுப்புகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு பிறகும் பணியிடங்களை அதிகரிக்க தி.மு.க., அரசு முயற்சிக்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசு கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா முனைப்பாக உள்ளார். காலியாக இருந்த முதல்வர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டன. இதேபோல இரண்டாவது ஷிப்ட் க்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேவையான பணியிடங்கள் குறித்து துல்லியமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், தி.மு.க., ஆட்சியில் நீடித்த குழப்பங்கள், தொடர் கதையாகி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இப்பிரச்னையில் உயர்கல்வித்துறை கழுகுப்பார்வை செலுத்த வேண்டும் என, மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.