உள்ளூர் செய்திகள்

ஒரேநாளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு

வரும் 23ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், அதே நாளில் 10ம் வகுப்பு மெட்ரிக் மாணவர்களுக்கு மொழி இரண்டாம் தாள் தேர்வும் நடக்கின்றன. இது குறித்து, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஒரே மையத்தில் இரு பிரிவு மாணவர்களுக்கும் தேர்வு நடத்துவது வழக்கமானது என்றாலும், பிளஸ் 2 தேர்வுகள் நடக்காத தினத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு 23ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், மெட்ரிக் மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடக்கின்றன. இதனால், வினாத்தாள்களை மாற்றி வழங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு தனி பார்வையாளர்கள் வருவர்; 10ம் வகுப்புக்கு தனி பார்வையாளர்கள் வருவர். இரு பார்வையாளர்களும், ஒரு மையத்திற்கு வரும்போது, யார், எந்த அறைக்குள் சென்று பார்வையிடுவது தெரியாமல், குழப்பமடையும் நிலை ஏற்படலாம். ஏதாவது ஒரு வகையில் குளறுபடிகள் நடந்தாலும், அதனால் மாணவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். எனவே, மெட்ரிக் தேர்வை வேறு தேதிக்கு மாற்றி வைத்தால், பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல், ஓட்டுப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 13ம் தேதி, அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அல்லாத பிற வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடக்கிறது. இதனால், அந்த தேர்வை வேறு தேதிக்கு தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு கூட, திருச்சி மாவட்டம் முசிறியில் பிளஸ் 2 விடைத்தாள் பண்டல்கள் காணாமல் போயின. வேலூரில், மர்மமாக ஏற்பட்ட தீ விபத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் கட்டுகள் தீயில் கருகி சாம்பலாயின. தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் 10ம் வகுப்பு வினாத்தாள், ‘லீக்’ ஆன விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, தேர்வு விவகாரங்களில் முழு விழிப்புணர்வுடன் தேர்வுத் துறை செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். மாணவர்களுக்கு வினாத்தாளை மாற்றினால் கூட, அதனால் மாணவர்கள் பீதி அடைந்து, தேவையில்லாமல் பதட்டம் அடைய நேரிடும். இதனால், நேரமும் வீணாகும். மேலும், இரு மாணவர்களின் விடைத்தாள்கள் கலந்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. இதை மனதில் கொண்டு, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதை, முன்கூட்டியே தேர்வுத் துறை தடுத்திட வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்