மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் 5,000 ஊழியர்கள் வேலையிழப்பு
நியூயார்க்: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. விரைவில் அந்நிறுவனத்தில் 5,000 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன. பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்டிலும் இந்நடவடிக்கை துவங்கிவுள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இன்னும் 18 மாதங்களில் 5,000 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட உள்ளனர். மனித வளம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளில் ஆட் குறைப்பு நடக்கவுள்ளது. தற்போது, முதல்கட்டமாக 1,400 ஊழியர்கள் பணி இழந்துள்ளனர். இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதிப்பு இருக்காது. மைக்ரோசாப்டின் இந்திய கிளைகளில் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்றார்.