பாடமே இல்லை: 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல், பெயருக்கு செயல்படும் ஆய்வகங்கள்
விருதுநகர்: தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் துாசு படிந்து கிடக்கின்றன. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்திற்கு மத்திய அரசு சமக்ர சிக் ஷா திட்டத்தில் நிதி ஒதுக்கியும் அதை முந்தைய அரசுகள் அறிவியல் பாடத்தில் மூன்று பக்கங்கள் மட்டுமே கணினி அறிவியலை வைத்து பெயருக்கு இந்த ஆய்வகங்களை செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்தது சர்ச்சையானது. இந்த ஆய்வில் இவர் முக்கிய பிரச்னையாக கணினி அறிவியல் பயிற்றுனர்கள் இல்லாமல் கணினி ஆய்வகங்கள் உள்ளதும், கணினிகள் பயன்படாமல் துாசு படிந்திருப்பதையும் கேட்டறிந்தார்.தமிழகத்தில் கணினி ஆய்வகங்களில் உள்ள கணினிகளின் எண்ணிக்கை மேல்நிலைப் பள்ளிகளில் 20, உயர்நிலைப் பள்ளிகளில் 10, நடுநிலைப் பள்ளிகளில் 10 என உள்ளது. பிளஸ் 1, +2 வகுப்பு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த கணினி ஆய்வகங்கள் வினாடி வினா, மொழி ஆய்வகமாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கும் இடமாக இல்லை.மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக கணினி ஆய்வகங்களில் கணினி ஆசிரியர்களை நியமிக்க சமக்ர சிக் ஷா திட்டத்தில் நிதி தந்ததோ அதை முந்தைய அரசுகள் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பு முதலே கணினி அறிவியலுக்கு என தனி பாடம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் கணினி தொடர்பான பாடத்தை அறிவியல் பாடத்தோடு மூன்று பக்கங்கள் மட்டும் இணைத்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் கூறியதாவது:மத்திய அரசு சமக்ரசி க் ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஐ.சி.டி., எனும் தகவல் தொழில்நுட்ப கல்வி மூலம் மாணவர்களுக்கு கணினி அறிவு வளர்க்க நிதி ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் அறிவியல் பாடத்தில் கணினி பற்றிய பாடம் மூன்று பக்கங்கள் மட்டுமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் ஆய்வகங்கள் முழுமையாக செயல்படுகிறது. 6ம் வகுப்பு முதலே பயில்வதால் கணினி அடிப்படை தெரிந்து அடுத்தடுத்து முன்னேற முடியும். மத்திய அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு பாடநுால், பாடவேளை தர அறிவுறுத்துகிறது. ஆனால் தமிழகம் மட்டும் பின்பற்றவில்லை. பி.எட்., கணினி அறிவியல் பயின்ற கணினி ஆசிரியர்கள் அல்லது பயிற்றுனர்கள் நியமிக்க நிதி ஒதுக்கியும் நியமிக்கவில்லை.புதிய அரசு கணினி ஆய்வகங்களில் கணினி பாடவேளை, பாடநுால் ஏற்படுத்தி, பயிற்றுனர்களை நியமித்து மாணவர்கள் மத்தியில் கணினி அறிவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.