உள்ளூர் செய்திகள்

பிளஸ் 1 கணினி அறிவியலில் ஆங்கில வழி கல்வி இல்லை: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

திருவாலங்காடு: திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 கணினி அறிவியல் பிரிவில் ஆங்கில வழிக்கல்வி இல்லாததால், மாணவியர் தவித்து வருகின்றனர். இதனால், 20 கி.மீ.,யில் உள்ள திருவள்ளூருக்கு செல்ல வேண்டியிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.திருவாலங்காடில் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.இங்கு பயிலும் மாணவ மாணவியர், 10ம் வகுப்பு முடித்தவுடன், மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு, ஆர்வத்துடன் அரசு பள்ளிகளை தேர்வு செய்தாலும், அப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி இல்லாததால், சேர்க்கைக்கு தடையாக உள்ளது.குறிப்பாக, திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1ல் கணினி அறிவியல் பிரிவு தமிழ் வழியில் மட்டும் தான் உள்ளது. இதனால், ஆங்கில வழியில் கற்க வரும் மாணவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் அவர்கள், 20 கி.மீ.,யில் உள்ள திருவள்ளூரில் உள்ள பள்ளியை தேடி செல்லும் அவலநிலை உள்ளது.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:திருவாலங்காடு, பெரியகளக்காட்டூர், மணவூர், காவேரிராஜபுரம் கிராமங்களில் இருந்து, ஆண்டுதோறும் 350 மாணவ மாணவியர் 10ம் வகுப்பு முடித்து வெளியேறுகின்றனர். அவர்களில் பலரும், கணினி அறிவியல் பாடப்பிரிவை விரும்பி தேர்வு செய்கின்றனர்.திருவாலங்காடு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி இல்லாததால் விரக்தியுடன் செல்கின்றனர். குறிப்பாக, திருவள்ளூர், அரக்கோணம் நகரங்களுக்கு மேல்நிலை கல்வி பயில மாணவியரை அனுப்ப மனமில்லாத பெற்றோர், மாற்று பிரிவில் சேர்க்கின்றனர். இதனால், பல மாணவியரின் கனவு கானல்நீராக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்