பிளஸ் 2 தேர்வு பறக்கும் படை பணி உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் உடற்கல்வி, பிற ஆசிரியர்களை 50 சதவீதம் எண்ணிக்கையில் பறக்கும் படையில் நியமித்தால் முறைகேடுகள் தடுக்க முடியும் என உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2 முதல் நடக்கிறது. இந்த தேர்வு பணியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் பறக்கும் படையில் நியமனம் செய்துள்ளனர். மற்ற ஆசிரியர்களை குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. தேர்வுத்துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பறக்கும் படையில் முதுகலை ஆசிரியர்களை மட்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உடற்கல்வி ஆசிரியர்களை பறக்கும் படையில் நியமனம் செய்யாமல் அறை கண்காணிப்பாளர் பணியில் மட்டும் நியமனம் செய்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொதுத் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் அதிக அளவில் நியமனம் செய்து வந்தனர். இதனால் தேர்வில் முறைகேடுகள் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டது. கல்வித்தரம் நன்றாக இருந்தது என உடற்கல்வி ஆசிரியர்கள் கூறகின்றனர்.தற்போது நிலைமை மாறிவிட்டது மாணவர்கள் சரியாக படிப்பது இல்லை. ஆசிரியர்களும் கண்டு கொள்வது இல்லை. இதனால் தேர்வில் அதிக அளவில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பொதுத் தேர்வில் உடற்கல்வி ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களை 50 சதவீதம் எண்ணிக்கையில் பறக்கும் படையில் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.