பிளஸ் 2 உடனடி தேர்வு தேவையா?
தேர்வெழுதிய ஒரு லட்சத்து 2,000 மாணவர்களில், 48.2 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதும், தேர்ச்சி பெறும் மாணவர்கள், உரிய காலத்தில் விரும்பிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியாததும், உடனடித் தேர்வு திட்டம் தேவையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு பாடத்தில் 65 ஆயிரத்து 946 மாணவர்களும், இரண்டு பாடங்களில் 25 ஆயிரத்து 985 மாணவர்களும், மூன்று பாடங்களில் 9,848 மாணவர்களும் என, ஒரு லட்சத்து 1,779 மாணவர்கள் உடனடித் தேர்வை எழுதினர். 49 ஆயிரத்து 75 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 48.2. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு சில வாரங்களில், உடனடித் தேர்வு நடப்பதால், தேர்வுக்கு போதுமான அளவிற்கு மாணவர் களால் தயாராக முடியாத நிலை இருக்கிறது. தேர்ச்சி சரிவிற்கு இதுவும் முக்கியக் காரணம். பல்வேறு குழப்பங்களும், மாணவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளும் நிறைந்துள்ள உடனடித் தேர்வு திட்டம் தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.