உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் 25 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ராமநத்தம்: ராமநத்தம் அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய போது, வாந்தி மயக்கம் ஏற்பட்ட 25 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த மா.புடையூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 100 மாணவிகள் அரசு பெண்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.இந்நிலையில், அரசு பெண்கள் விடுதியில் கடந்த 28ம் தேதி மதியம் உணவு சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நேற்று முன்தினம் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. பின், ஆவட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, விடுதி திரும்பினர்.நேற்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ் மொழிப்பாட தேர்வு நடந்தது. மா.புடையூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த 25 மாணவிகளுக்கு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 25 மாணவிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் வழங்கி தேர்வு எழுதி முடித்தனர்.தேர்வு முடிந்தவுடன், பாதிக்கப்பட்ட 25 மாணவிகள் மங்களூர் அரசு வட்டார மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.மா.புடையூர் அரசு பெண்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு கடந்த 2 நாட்களாக தொடர் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்படும் நிலையில், முறையான சிகிச்சை அளிக்காமல் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பெற்றோர் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்