1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் தளர்வு தர... கோரிக்கை!
நம் நாட்டில், ஒன்றாம் வகுப்பில் மாணவ மாணவியர் சேருவதற்கு 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. கர்நாடகாவிலும் இந்த விதிமுறை அமலில் உள்ளது. இதற்கு பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு குறிப்பிடும் வயதை நிர்ணயித்தால், குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளின் கல்வி ஓராண்டு தடைபடும். எனவே, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.அச்சம் இது தொடர்பாக, கடந்த காலங்களில், கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவிடமும், பெற்றோர் முறையிட்டு உள்ளனர். இருப்பினும், வரும் கல்வியாண்டில், விடாப்பிடியாக 6 வயது பூர்த்தி அடைந்திருந்தால் மட்டுமே, ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என, அரசு விடாப்பிடியாக உள்ளதாக தெரிகிறது. இது, பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஏனெனில், தற்போது யு.கே.ஜி., படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் சிலர், 5 வயது உடையவர்களாகவும்; 5.5 வயது உடையவர்களாகவும் உள்ளனர். இவர்களால், அரசு நிபந்தனைப்படி ஒன்றாம் வகுப்பில் சேர முடியாது. எனவே, இந்த குழந்தைகள் ஒரு ஆண்டு பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே காத்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு தான் ஒன்றாம் வகுப்பில் சேர முடியும்.இதற்கு, 'அப்பர் கின்டர் கார்டன்' பெற்றோர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது பற்றி, அச்சங்கத்தினர் கூறியதாவது:கேரளம், ஒடிசா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எல்லாம், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதே போல, கர்நாடகாவிலும் தளர்வு வழங்க வேண்டும். 90 நாட்கள் தளர்வு வழங்கினால் போதுமானது.பாதிப்பு வரும் கல்வியாண்டில், 2020 ஜூன் 1ம் தேதியன்று அல்லது அதற்கு முன் பிறந்த குழந்தைகள் மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், 02:30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட உள்ளனர். அவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.சிறு வயது வித்தியாசத்தில் எங்கள் குழந்தைகளின் கல்வி பாழாகுவதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக மாநில அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.கர்நாடகாவில் வரும் கல்வியாண்டில் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்பட்டு, மாநில கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். அதற்கு முன்னதாக ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், வயது வரம்பில் தளர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, கொரோனா காலகட்டம் அல்லது அதற்கு பிந்தைய காலத்தில் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவர். ஒரு சிறிய விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, 2.30 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்தில் மாநில அரசு விளையாடக் கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.