10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் அரசு பள்ளிகள் இமாலய வெற்றி; கடந்தாண்டை காட்டிலும் 18.54 சதவீதம் அதிகம்
புதுச்சேரி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 99.79 சதவீத வரலாற்று தேர்ச்சியை பெற்றுள்ளனர்.நாடு முழுதும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான ரிசல்ட்டினை மத்திய இடைநிலை வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. புதுச்சேரி கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அரசு பள்ளிகளுக்கு இமாலய - வரலாற்று தேர்ச்சியை பெற்றுள்ளன.மாநில தேர்ச்சிசி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களை சேர்ந்த 5,594 அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதினர். இதில் 5,582 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை 99.79 என, எகிற வைத்துள்ளனர்.இந்த தேர்ச்சி முக்கியத்துவத்தை முந்தைய ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிடும்போது பிரமிக்க வைத்துள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 81.25 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஓராண்டு கால இடைவெளியில் தேர்ச்சி 18.54 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேர்ச்சி அரசு பள்ளிகளின் மீதான கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளன.பிராந்திய ரீதியாக…மாநிலத்தின் நான்கு பகுதிகளுமே சரிநிகர் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் (முறையே 333 மற்றும் 251 மாணவர்கள்) தேர்ச்சி பெற்று 100 சதவீத சாதனையைப் படைத்துள்ளனர்.புதுச்சேரி பகுதியில் 3,865 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3,858 பேர் தேர்ச்சி பெற்று 99.82 சதவீதமும், காரைக்கால் பகுதியில் 1,145 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,140 பேர் தேர்ச்சி பெற்று 99.56 சதவீதத்தையும் எட்டியுள்ளனர்.100 சதவீதம் தேர்ச்சி்தனிப்பட்ட முறையிலும் புதுச்சேரி அரசு பள்ளிகளின் செயல்திறனும் இந்த ஆண்டு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள மொத்தம் 122 அரசுப் பள்ளிகளில், 115 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.புதுச்சேரி பிராந்திய பகுதியில் உள்ள 83 பள்ளிகளில் 79 பள்ளிகள் முழுமையான தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 25 பள்ளிகளில் 22 பள்ளிகள் இந்த இலக்கை எட்டியுள்ளன.மாகே பிராந்தியல் 6 பள்ளிகள் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் 8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று வியக்க வைத்துள்ளன.தவிடுபொடி...சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, பல்வேறு கேள்விகள் அரசினை நோக்கி எழுந்தன. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் கடினம். அவ்வளவு பெரிய சுமையை அரசு பள்ளி மாணவர்களால் தாங்கவே முடியாது என்று கேள்விகணைகள் எழுந்து அச்சப்பட வைத்தது. ஆனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டிலேயே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி அரசு பள்ளிகள் இமாலய தேர்ச்சி சாதனையை பதிவு செய்து சாதித்துள்ளன.இது அரசு பள்ளிகளை நோக்கி எழுந்த அனைத்து விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கியுள்ளது. புதுச்சேரி அரசு, பள்ளி கல்வித் துறை எடுத்த துணிச்சலான முடிவிற்கு கிடைத்த முதல் வெற்றி இது.அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தரம்மிக்க கல்வியைப் பெற்று தேசிய அளவிலான பாடத்திட்டங்களில் சாதிக்க முடியும் என்பதை இந்த முடிவுகள் மெய்ப்பித்துள்ளன. 5,594 மாணவர்களில் வெறும் 12 பேர் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை என்பது, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும் மாணவர்களின் விடாமுயற்சிக்கும் கிடைத்த அற்புதமாதமான வெற்றி. சாதித்த அரசு பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுறையாக இருந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.தனியார் பள்ளி ரிசல்ட் எப்போது?கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சி.பி.எஸ்.இ., ரிசல்ட் தனிப்பட்ட முறையில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு தொகுத்து வெளியிட்டுவிட்டோம். தனியார் பள்ளிகளில் ரிசல்ட் கேட்கப்பட்டுள்ளது. இன்று 16ம் தேதி கிடைத்ததும் தொகுத்து வெளியிடப்படும்' என்றனர்.