10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 10ம் தேதி (இன்று) காலை வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெற்றது. இன்று காலை சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம்.தேர்வு முடிவை, www.tnresults.nic.in/, www.dge.tn.gov.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.