100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் விலகல் ராஜினாமா விதிகளை கடுமையாக்கியது இஸ்ரோ
புதுடில்லி: 'ககன்யான்' உள்ளிட்ட முக்கிய விண்வெளி திட்டங்களில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் சமீபத்தில் ராஜினாமா செய்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் பதவி விலகலுக்கான விதிகளை கடுமையாக்கி விண்வெளி துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மத்திய அரசின் கீழ் செயல்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ', 'ககன்யான்' எனப்படும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம், 'சந்திரயான்' உள்ளிட்ட பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இஸ்ரோவில் தற்போது 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். முக்கிய திட்டங்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் சமீபத்தில் விலகியுள்ளனர்.அவர்களில், 'சந்திரயான் - 3' திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஆதித்ய ரல்லப்பள்ளி உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து மத்திய விண்வெளி துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:'ககன்யான்' உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் ஈடுபட்டுள்ள, 'குரூப் - ஏ' விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு கோரிக்கைகளை, இஸ்ரோ இயக்குநர்கள் நேரடியாக ஏற்கக் கூடாது.அனைத்து கோரிக்கைகளும் இறுதி ஒப்புதலுக்காக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும். முக்கிய திட்டங்கள் நிறைவடையும் வரை அவற்றை ஏற்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தனியார் நிறுவனத்தில் இணைந்தார் 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் 'இஸ்ரோ'வின் முக்கிய திட்டங்களான, 'சந்திரயான் - 3, ஆதித்யா எல் - 1, எல்.வி.எம்., - 3' ஆகியவற்றின் உருவாக்கங்களில் வழிநடத்திய முன்னாள் தலைவர் சோம்நாத், சென்னையை சேர்ந்த, 'அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் தனியார், 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார். இது, சர்வதேச விண்வெளி துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த, 'அக்னிகுல் காஸ்மோஸ்' நிறுவனம், மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, செயற்கைகோளை விண்ணில் செலுத்திய பின், பிரிந்து கடலில் விழும் அடிபாகம், அதற்கு முன்பே மீட்கப்பட்டும், விண்வெளி குப்பையாக தங்கும் மேல்பாகம், தொடர்ந்து இயங்கும் வகையிலும் மறுபயன்பாட்டு ராக்கெட் செலுத்தப்படும். இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், விண்வெளித் துறையின் செலவில், பாதிக்கு மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.