உள்ளூர் செய்திகள்

புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில் செல்கிறேன், நுாலகத்திற்கு வந்த ஸ்ரீராமபுரம் தமிழர் நெகிழ்ச்சி

பெங்களூரு: “வயிற்று பசியுடன் வந்து 'புல் மீல்ஸ்' சாப்பிட்டது போன்ற திருப்தியுடன், புத்தகங்களை படித்து மனநிறைவுடன் செல்கிறேன்,” என்று, தினமலர் நுாலகத்திற்கு வந்த ஸ்ரீராமபுரம் தமிழர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.பெங்களூரு தினமலர் அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள, நுாலகத்திற்கு பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நுாலகத்திற்கு ஆர்வமாக வருகின்றனர்.பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீராமபுரத்தின் சாய்பாபா நகரின் சுப்பிரமணியன், 74 என்பவர், தனது நண்பர் செல்வராஜன், 65 என்பவருடன் நேற்று நுாலகத்திற்கு வந்தார்.நுாலகத்தில் உள்ள புத்தகங்களை நண்பர்கள் இருவரும் பார்த்தனர். மிகுந்த ஆர்வத்துடன், செல்வராஜன், குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொடர்பான புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்து படித்தார். படிக்கும் போதே அவர் முகத்தில் புன்முறுவலை பார்க்க முடிந்தது.இரண்டு பைசா பின், சுப்பிரமணியன் கூறியதாவது:எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா முக்கூரிமை கிராமம். கடந்த 1962 ல் இந்தியா - சீனா போர் நடந்தது. அது தொடர்பான செய்திகள் தினமலர் நாளிதழில் சிறப்பாக வந்தது. அந்த நேரத்தில் இரண்டு பைசா கொடுத்து நாளிதழ் வாங்கி படித்தேன்.தற்போது வரை தினமலர் தவிர வேறு நாளிதழை படித்தது இல்லை. இந்த நுாலகம் தமிழ் வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கடவுள் கொடுத்த வரமாக பார்க்கிறேன். வயிற்று பசியுடன் வந்து 'புல் மீல்ஸ்' சாப்பிட்டது போன்ற திருப்தியுடன், இங்குள்ள புத்தகங்களை படித்து மனநிறைவுடன் செல்கிறேன்.இந்த நுாலகம் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களின் அறிவு பசியை போக்கும் என்று நம்பிக்கை உள்ளது. எந்த புத்தகங்களை படிப்பது, எதை விடுவது என்றே தெரியவில்லை. அனைத்து புத்தகங்களும் அருமை. எங்களை போன்றோர் கேட்டு கொண்டதன் பேரில், சாய்பாபாநகர் வெல்பர் அசோசியேஷனில், தினமும் தினமலர் நாளிதழ் வாங்குகின்றனர். இந்த அசோசியேஷனில் உள்ளவர்களையும், இங்கு அழைத்து வரமுயற்சி எடுக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.செல்வராஜன் கூறுகையில், “நுாலகத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது பேரக்குழந்தைகளையும் அழைத்து வருகிறேன். தமிழ் மொழியை வளர்க்க நல்ல முயற்சி எடுத்து உள்ள, தினமலர் நிர்வாகத்திற்கு எனது நன்றி. தினமலரின் இந்த முயற்சி தமிழர்களுக்கு பெரும் பலன் அளித்து உள்ளது,” என்றார்.நுாலகம் தொடர்பாக, 93615 00327, 89715 09091 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்