5,000 ஆசிரியர்களின் இடமாற்றம் ரத்து
விக்ரம் நகர்: தனது உத்தரவு இல்லாமல் பிறப்பிக்கப்பட்ட 5,000 ஆசிரியர்களுக்கான இடமாறுதல் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு, தலைமைச் செயலர் நரேஷ்குமாருக்கு டில்லி கல்வி அமைச்சர் ஆதிஷி உத்தரவிட்டுள்ளார்.ஆசிரியர் பணியிடங்களை மாற்றுவதற்கான ஆன்லைன் கோரிக்கைகள் என்ற தலைப்பில், கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரியர்கள் கட்டாயம் இடமாறுதல் பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்கள்.தவறினால், எந்தப் பள்ளிக்கும் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆதிஷி கூறியதாவது:ஒரு பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் எந்த ஆசிரியரையும் இடமாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனது உத்தரவுக்கு மாறாக, ஜூலை 2ம் தேதி, கிட்டத்தட்ட 5,000 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெறும்படி, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊழல், முறைகேடு நடந்துள்ளதா என, விசாரணை நடத்தும்படியும் கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.