உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

தெரு நாய்களுக்காக ஒரு துளி கண்ணீர்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். இது ஒரு குறள். சுருக்கமாக விளக்கம் என்ன என்றால், பிரச்னையின் மூலம் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்வது தான் அறிவுடமை என்கிறார் வள்ளுவர். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்டிவாலா, மகாதேவன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவை படித்ததும் மனதில் தோன்றிய குறள் இது. தெரு நாய்களை ஒன்று விடாமல் பிடித்து பட்டியில் அடைக்குமாறு டில்லி அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். எக்காரணம் கொண்டும் அந்த நாய்களை திறந்து விட கூடாது; அப்படி விடுமாறு நாய்களுக்காக யாராவது குரல் கொடுத்தால், அவர்கள் மீது வழக்கு போடுங்கள் என்று கடுமையாக உத்தரவு போட்டுள்ளனர் நீதிபதிகள். இந்தளவு கோபத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நாய்கள் மனிதனின் மிகச்சிறந்த நண்பர்கள். அசாத்தியமான நன்றி உணர்வு கொண்டவர்கள். அன்புக்கு அடிமைகள். வாழ்க்கையே வெறுத்து விரக்தியின் விளிம்புக்கு போன எத்தனையோ பேர், முன்பின் தெரியாத ஒரு நாயின் தொடர்பால் முற்றிலும் மாறி, சாதனையாளர்களாக மாறிய உண்மைக் கதைகள் ஏராளம். பலர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை. ஆனால், ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்துக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கும். அதில் காரணம் இருக்கும். துரதிர்ஷ்டம் என்ன என்றால், எவருமே அதை சொல்வதும் இல்லை, ஆராய்வதும் கிடையாது. நாய் மட்டுமல்ல. எந்த விலங்கும் காரணமின்றி மனிதனை தாக்குவது இல்லை. இது ஆராய்ச்சி அடிப்படையில் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்ட முடிவு. மற்ற விலங்குகள் எல்லாம் காட்டுக்குள் துரத்தப்பட்ட பிறகு, மனிதனுக்கு எஞ்சியிருக்கும் ஒரே தோழன் நாய். இந்தியா 140 கோடி மக்களை கொண்ட நாடு. தெரு நாய்களின் எண்ணிக்கை இதில் ஒரே ஒரு சதவீதம் என்கிறது அரசின் கணக்கு. தேவையின்றி சீண்டுவது, கல்லால் அடிப்பது, வாகனத்தால் பயமுறுத்துவது போன்ற தூண்டுதல் இருந்தால் தவிர, தெரு நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. டெரிட்டோரியல் அனிமல் அல்லது எல்லை வரைந்து அதற்குள் வாழும் விலங்கு என்று நாய்களுக்கு இயல்பு குறிப்பிட்டுள்ளனர். சிறுநீர் கழித்து அது வரைந்து வைத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் எவராவது வந்தால், தற்காப்பு உணர்வுடன் அது குரைத்தபடி துரத்துவது இந்த எல்லை உரிமையின் வெளிப்பாடு. எல்லை தாண்டிவிட்டால் எவரையும் அது பின் தொடர்வது இல்லை. நாய்களை எப்படி அணுக வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக, நாய்களை கொடிய விலங்கு போல சித்தரித்து கதை சொல்லும் பழக்கம் பல பெற்றோருக்கு இருக்கிறது. எங்காவது ஒருவர் நாய்க்கடிக்கு ஆளானால், கடித்து குதறியது என்று பயமுறுத்தும் வகையில் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன ஊடகங்கள். இதனால், நேற்று வரை கவனத்தில் கூட வராமல் அதன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த நாய்கள், திடீரென இன்றைக்கு வில்லன்களாக தோற்றம் தருகின்றன. இது, பார்ப்பவர்களின் மனநிலையையும், அதன் விளைவாக நாய்களின் உணர்வுகளையும் பாதிக்கிறது. தெரு நாய் என்பதே தவறான சித்தரிப்பு. வீடற்ற நாய்கள் என்பதே சரி. வீட்டுக்கொரு நாய் தத்தெடுத்து வளர்த்தால், வீடற்ற நாய்களே இருக்காது. அந்த நாய்கள் விருப்பப்பட்டு கருத்தரித்து குட்டிகளை பிரசவிப்பது இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் இயலாமை அல்லது அலட்சியம் காரணமாக இந்த எண்ணிக்கை பெருக்கம் நடக்கிறது. தெரு நாய்கள் என்று கேவலமாக சொல்லப்படும் இந்த விலங்குகளால் தான், திருட்டு உள்ளிட்ட பல குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பது நிஜம். மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது இந்த பூமி என்கிற அறியாமையிலும் ஆணவத்திலும் பல விலங்குகளை நம்மிடம் இருந்து ஒதுக்கி விட்டோம். கடைசியாக, மனிதனின் சிறந்த நண்பன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெருமை பெற்ற நாய்களையும் ஒதுக்கி விட்டால், மனிதன் தனிமரம் ஆகி விடுவான். போதையில் கொலை செய்யும் மனிதர்கள், விபத்தால் சாகடிக்கும் டிரைவர்கள், வேண்டியவர்களையே விஷம் வைத்து கொல்லும் கொடூரர்கள், இன்னமும் அடையாளம் காண முடியாத ஆட்கொல்லி நோய்கள் ஆகியவற்றை காட்டிலும் ஆதரவு இல்லாத நாய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. ஓட்டு போடும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவே மூச்சுத் திணறும் உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பில் வாக்குரிமை இல்லாத தெரு நாய்களின் விதி ஒப்படைக்கப்பட்டால், அவற்றின் கதி என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாய்கள் நமது நண்பர்கள். நன்றி உணர்வுக்கு பேர் போன அவர்களை விலக்கி வைத்து விரட்டி அடித்து அழித்தொழிப்பது விவேகம் இல்லாத செயல். நமது தவறுகளுக்காகவும் இயலாமைக்காகவும் நாய்களை தண்டிப்பது அநியாயம். சராசரி மனிதர்களை போல சுப்ரீம் கோர்ட் உணர்ச்சிவசப்பட்டு உத்தரவுகள் பிறப்பித்தால், பிரஜைகள் வேறு யாரிடம் முறையிட முடியும்? கடவுளை தவிர. - பைரவி-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Srivilliputtur S Ramesh
ஆக 13, 2025 03:30

யார் அந்த பைரவி ? நாடெங்கும் நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே போகிறது. இறுதியில், மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட நாய்களின் எண்ணிக்கை பெருகி, இது "பாரத தேசம்" என்பதற்குப்பதிலாக, "நாய் தேசம்" என்றாகி விடக்கூடும். தெரு நாய்களிடம் கடி பட்டு, உங்கள் வீட்டில் உள்ள உங்கள் உறவினர்கள் யாராவது, ஆஸ்பத்திரியில் இறந்து போனால், நீங்கள் என்ன செய்வீர்கள் ? ஒருவருடைய கஷ்டத்தை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.... இது தேசத்தையே உலுக்கும் பிரச்சனை.. நாய்க்கடிக்கான, மருந்துகளின் விலை உங்களுக்குத் தெரியுமா ?


Iyer
ஆக 13, 2025 02:24

திமிர் , ஆணவம் , சுயநலம் பிடித்தவன் மனிதன். உலகில் வாழ தனக்குத்தான் உரிமை உண்டு என நினைக்கிறான் மனிதன். ஒவ்வொரு வீட்டிலும் - தினமும் இரவு உணவுக்குப்பின் - ஒரு கைப்பிடி சோறு - நாய்க்கு கொடுத்தால் போதும் ஒரு நாய்க்கடி சம்பவமும் நடக்கவே நடக்காது காடுகளும் மரங்களும் தான் - விலங்குகளின் உணவுக்கு மூலம் அறிவற்ற , சுயநலம் பிடித்த மனிதன் காடுகளையும் மரங்களையும் அழித்து விலங்குகளை பட்டினி கிடக்க விட்டான் நாய்களுக்கு தினமும் உணவு வழங்குவது மனிதனின் கடமை


மண்ணாந்தை
ஆக 12, 2025 23:49

இது நீதிமன்றத்தில் வந்த அற்புதமான தீர்ப்பு. இதை விட ஜீவகாருண்யம் மிக்கதொரு தீர்ப்பு இருக்க முடியாது. இந்தியாவில் பிறந்துவிட்ட காரணத்தாலேயே நாய்கள் கேட்பாரற்று தெருவில் வெயிலிலும் மழையிலும் வாடி பிச்சை எடுத்து வீசி எறியப்படுவதை உண்டு வாழ வேண்டுமா என்ன. அவை ஏன் ஒரு காப்பகத்தில் இருக்கக்கூடாது. விலங்குப்பிரியர்கள் அங்கு சென்று உணவிடலாமே. அல்லது ஒன்றை தத்தெடுத்து வீட்டில் வைத்து வளர்க்கலாமே. நம்மில் சிலர், வெளிநாட்டில் unskilled workmen கூட BMW காரில் வருகிறார்கள் என்று அங்கலாய்ப்பதுண்டு. இதை தெருநாயின் கோணத்தில் பாருங்கள். அது இப்படி நினைக்கிறது. தன் இன நாயை வெளிநாட்டில் unskilled workmen கூட தன் பின் இருக்கையில் BMW காரில் அழைத்துச் செல்கிறார். இங்கு இவர் ரொட்டி துண்டை வீசிவிட்டு தான் காரில் சென்று விடுகிறார் என்று நினைத்தால் எப்படியிருக்கும். தெரு நாய்க்கு உணவிடும் யாரும் ஒருவரும் அதை பீச் சினிமா கோயில் என்று காரில் அழைத்துச் செல்வது தானே.


Kumaran Krishnamoorthy
ஆக 12, 2025 23:17

கட்டுரையாளர் நாய் துரத்திய அனுபவம் இல்லை போல்...


Gandhi
ஆக 12, 2025 22:59

கண்டிப்பாக இந்த கட்டுரை ஏற்றுக்கொள்ள முடியாது. இரவு நேரத்தில் தனி ஒரு ஆளாகா நடந்து செல்ல முடியாது. பைக்கில் செல்லவும் முடியாது. கட்டுரை எழுதுவது மிகவும் எளிது. அதனுடைய வலி அனுபவம் உள்ளவருக்கு மட்டுமே புரியும்.


theruvasagan
ஆக 12, 2025 22:30

கட்டுரையாளர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தையும் சோகத்தையும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் கேட்டிருக்கவோ அல்லது பாரத்திருக்க மாட்டார் என்பது நன்றாக தெரிகிறது. 30- 40 ஆண்டுகளுக்கு தெருவில் திரி்ந்த நாய்களுக்கும் இன்றைக்கு இருக்கும் தெருநாய்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மனிதர்கள் கொடூரமாக மாறிவிட்டதைப்போல விலங்குகளும் கொடுரமாக மாறிவிட்டன. நாய்க் கடியில் பரவும் ரேபிஸ் கிருமிகள் மனிதர்களுக்கு மிக ஆபத்தானது என்பதை பலதடவை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.


Easwar SR
ஆக 12, 2025 21:30

நாயின் மேல் அவ்வளவு பாசமும் அக்கறையும் உள்ளவர்கள், அவர்கள் ஊரில் உள்ள எல்லா தெரு நாய்களையும் அவர்கள் வீட்டில் வைத்து வளர்கட்டும்.


SP
ஆக 12, 2025 21:17

இந்த கட்டுரையை எழுதியவர் நிச்சயமாக காரில் சென்று வருபவராக தான் இருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு தனியாகவே நடந்து வந்திருக்கிறோம் இப்பொழுது அது முடியாது அதாவது இந்த கட்டுரையாளருக்கு தெரியுமா? இவரது கருணையை ஆடு மாடு கோழி என்று எந்த இடஞ்சலும் தராத உயிரினத்திலும் காட்டலாம்.


DINESH ARAVINDH B
ஆக 12, 2025 21:12

நாய்கள் ஒரு காட்டு விலங்கு உயிரினம். விலங்குகள் எப்போதும் கூட்டமாக சேர்ந்தால் மற்றொரு உயிரினத்தை தாக்குவது அதன் இயல்பு. மனிதனால் காட்டில் வாழ முடியாது என்பதனால்தான் காட்டை விட்டு வெளியேறி கூட்டங்களாக சமுதாயங்களாக வாழத் தொடங்கினர். அது போல் காட்டு விலங்குகளும் காட்டில் வாழ்வதுதான் சிறந்தது


பாபு
ஆக 12, 2025 20:51

எனது மகள் anxiety பிரச்சனையிலிருந்து விடுபட்டது ஒரு தெருநாயால்தான். ஆனாலும், 1. தேவையானவர்கள் லைசென்ஸ் வாங்கி வீட்லயே வளர்க்க வேண்டும். 2. அனைத்து தெருநாய்களுக்கும் ஆபரேஷன் செய்து விடவேண்டும். 3. அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி ஒவ்வொரு வருடமும் போட வேண்டும். 4. அனைத்து தெருக்களிலும், ஊர்களிலும் நாய்கள் எண்ணிக்கையை கால்நடை மருத்துவமனைகள் அல்லது சுகாதாரத் துறை கண்காணிக்க வேண்டும். 5. இதில் பொதுமக்கள் உதவியுடன் அவரவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மூர்க்கத்தனமானவற்றை உடனடியாக பிடித்து தனிக் கொட்டகைளில் அடைத்துப் பராமரிக்க வேண்டும். 6. நாய் தொல்லை புகார் எண் அரசு உருவாக்க வேண்டும். 7. நாய்த் தொல்லை தன்னார்வலர்கள் குழுக்கள் உருவாக்க வேண்டும். இன்னும் பல செயல்களை அனைவரும் சேர்ந்து யோசித்தால், பதில்கள் கிடைக்கும். இவ்வாறாக மனிதர்கள்-நாய்கள் CONFLICTS உருவாகாமல் தடுக்க முடியும். நன்றி வணக்கம்.


முக்கிய வீடியோ