'சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரிக்கவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயர்மட்ட விசாரணை வேண்டும்' என, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.அதன் விபரம்:தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: விமானப்படை சாகச நிகழ்ச்சியில், 17 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடினாலும், கூடிய இடத்தில் மரணமில்லை; வெளியே சென்ற இடத்திலும் மரணமில்லை.ஏற்பட்ட ஒரு மரணமும், அந்த நபர் சில பானம் சாப்பிட்டு இருக்கிறார் என தெரிய வந்தது.அதை தற்போது கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மீதமுள்ள நான்கு பேரும், இரு சக்கர வாகனங்களை எடுக்கச் சென்றபோது, நீர்ச்சத்து குறைவால் இறந்துஉள்ளனர். இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனி வரும் காலங்களில் இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கும் போது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் விசாரணை கமிஷன் அமைத்து, எதற்காக உச்சி வெயிலில் விமானப் படையினர் சாகசம் செய்தனர் என்பதையும், வெயில் தாக்கம் இருக்கும் நேரத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். வி.சி., தலைவர் திருமாவளவன்: இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை; வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன. வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து, இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து, அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: 'உரிய நேரத்தில் குடிநீர் எடுத்துக் கொள்ளாமல், அதனால் ஏற்பட்ட வெப்பவாதம் உயிரை பறித்திருக்கலாம்' என, கூறப்படுகிறது.அரசு மருத்துவமனையில் 4,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, டாக்டர்கள் தயார் நிலையில் இருந்ததாக அரசு கூறியுள்ளது.இருப்பினும், வெப்பவாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா; மக்கள் கூடி பார்வையிடும் இடங்களில், குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. எனவே, இது தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.பா.ம.க., தலைவர் அன்புமணி: நிகழ்ச்சியை காண, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவர் என, விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதை எதிர்பார்த்து தேவையான ஏற்பாடுகளை கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்பு துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக, பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது. ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிய தமிழக அரசு தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க., - எம்.பி., கனிமொழி: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்கள், கூட்ட நெரிசலால் அவதியுற்றதுடன், வெப்பநிலையும் அதிகமாக இருந்ததால், ஐந்து பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்கள், கூட்ட நெரிசலால் அவதியுற்றதுடன், வெப்பநிலையும் அதிகமாக இருந்ததால், ஐந்து பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள் இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- கனிமொழி,தி.மு.க., - எம்.பி.,
ஒரு நிகழ்வு வேதனையாகி விட்டது.
- ஆதவ் அர்ஜுனாதுணை பொதுச்செயலர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
இது, அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. விமானப் படையினர் சாகச நிகழ்வை மிகச்சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனால், பாதுகாப்பு தர வேண்டிய தமிழக அரசு பாதுகாப்பு செய்யாமல் தவறி விட்டது. மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு மட்டும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொண்டுள்ளனர். கருப்பு கண்ணாடி போட்டு கொண்டு இருந்ததால், மக்களின் கஷ்டம், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கண்ணுக்கு தெரியாமல் போய் விட்டது.
- பிரேமலதா,தே.மு.தி.க., பொதுச்செயலர்
விளக்கம் கேட்பு
விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த ஐந்து பேர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, காவல் துறைக்கு, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுஉள்ளார்.பாதுகாப்பு குளறுபடி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளதா; இதற்கான காரணம் குறித்து விளக்க அறிக்கை அளிக்குமாறு, காவல் துறைக்கு, உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
'கார் பந்தய அக்கறையை
இதிலும் காட்டியிருக்கலாமே!'தமிழக பா.ஜ., அறிக்கை:கார் பந்தயத்திற்கு காட்டிய அக்கறையில் கால்வாசியையாவது, விமான சாகச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் காட்டியிருக்கலாமே துணை முதல்வர் உதயநிதி. கார் பந்தயத்திற்கு புது சாலை போட தெரிந்த உங்களுக்கு, லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் உண்டாகும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தெரியவில்லையா? ஒழுங்கற்ற கடும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் பட்ட துன்பங்களுக்கு யார் பொறுப்பு?தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தராமல் மக்களை அலைக்கழித்ததற்கு, தமிழக மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். நிர்வாக திறனின்மையை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண, லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்காததால், கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். எவ்வளவு பேர் கூடுவர் என்பதை உளவுத்துறை வாயிலாக தெரிந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது. ஐந்து பேர் பலியானது, அரசின் செயலற்ற தன்மை, கையாளாகாத தன்மையை காட்டுகிறது, இது, வெட்கக்கேடான விஷயம். தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு என்றால் மக்களை பாதுகாக்க வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அரசின் கவனக்குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
-பழனிசாமிஅ.தி.மு.க., பொதுச்செயலர்
'ரூ.5 லட்சம் நிவாரணம்; அடுத்த முறை கூடுதல் கவனம்'
'அடுத்த முறை விமான சாகசம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது, கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு, அவர்கள் கேட்டதற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக காவல், தீயணைப்பு, சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் நல்வாழ்வு ஆகிய முக்கிய துறைகள் ஒருங்கிணைந்து, சிறந்த நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.இருப்பினும், எதிர்பார்த்த எண்ணிக்கையை விட, மிக மிக அதிக அளவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின் திரும்ப செல்லும்போது, மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொது போக்குவரத்தை பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்த முறை இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது, இவற்றில் கூடுதல் கவனமும், ஏற்பாடுகளும் செய்யப்படும். கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவ காரணங்களால், ஐந்து விலை மதிப்பற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- நமது நிருபர் -