| ADDED : டிச 20, 2025 08:05 AM
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகும். நீதித்துறையை பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இளம் வழக்கறிஞர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்(இம்பீச்மென்ட்) கொண்டுவர தி.மு.க.,- காங்., அடங்கிய 'இண்டி' கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்றக் கிளை இளம் வழக்கறிஞர்கள் தனித்தனியாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். அதில் கூறியிருப்பதாவது:பதவி நீக்கத் தீர்மானம் முற்றிலும் நியாயமற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. நீதிபதி சுவாமிநாதன் அர்ப்பணிப்புடன் 2017 மற்றும் 2025க்கு இடையில் 73 ஆயிரத்து 505 வழக்குகளுக்குதீர்வு கண்டுள்ளார். இது நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும், மதம் மற்றும் ஜாதி பேதமின்றி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பாரபட்சமற்ற நீதியை வழங்குவதிலும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பிரதிபலிக்கிறது.பதவி நீக்கத் தீர்மானத்திற்கான உண்மையான காரணம், அவர் சமீபத்தில் தமிழக அரசுக்கு எதிராக வழங்கிய கடுமையான தீர்ப்பே என்பது தெளிவாகிறது. நீதித்துறையின் தீர்ப்பை குறிவைத்து, பதவி நீக்க நடைமுறையை ஒரு கருவியாக பயன்படுத்தி,நீதிபதியை நீக்க முயற்சிக்கப்படுகிறது. இது நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைப்பது மற்றும் நீதித்துறை மத்தியில் அச்சத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. நீதித்துறையை பாதுகாக்க உடனடியாக தலையிட்டு, இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டுகிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.