ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் வகையில், சபைக்குள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணி கட்சிகள் கொண்டு வந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜ்யசபாவின் தலைவராக, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளார். ராஜ்யசபாவில், சபைத் தலைவருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக அவர் நடந்து கொள்கிறார் என, எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளன.இந்நிலையில், நடப்பு பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மோதல் அதிகரித்துள்ளது. சபையில், ஒரு எம்.பி.,யின் இருக்கைக்கு கீழ், 500 ரூபாய் கட்டுகள் இருந்ததாக, ஜக்தீப் தன்கர் சமீபத்தில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். அதுவும், காங்கிரசின் அபிஷேக் மனு சிங்வியின் இருக்கையின் கீழ் இருந்ததாக அவர் கூறினார். விசாரணை நடத்தாமலேயே, எம்.பி.,யின் பெயரைக் குறிப்பிட்டு சபைத் தலைவர் குற்றஞ்சாட்டியதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கை உள்ள அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நிதியுதவி அளிக்கும் அமைப்புடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜ., எதிர் பிரசாரம் செய்து வருகிறது.அதானி விவகாரத்தை சபையில் பேசுவதற்கு அனுமதி அளிக்காத சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு அனுமதி அளித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.இதையடுத்தே, ஓரவஞ்சனையுடனும், ஒருதலைபட்சமாகவும் நடந்து கொள்வதாக ஜக்தீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின், இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இதன்படி ராஜ்யசபா செயலரிடம், கூட்டணிக் கட்சிகள் சார்பில், 60க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை கொடுத்துள்ளனர்.காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரசின் பார்லிமென்ட் குழுத் தலைவர் சோனியா, பல எதிர்க்கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் இதில் கையெழுத்திடவில்லை.லோக்சபாவில் சபாநாயகருக்கு எதிராக இதற்கு முன் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த, 1954ல் ஜி.வி. மவலாங்கர், 1987ல் பல்ராம் ஜாக்கருக்கு எதிரான தீர்மானங்கள் தோல்வி அடைந்தன. அதே நேரத்தில், 1966ல், ஹூகும் சிங்குக்கு எதிரான தீர்மானம், போதிய உறுப்பினர் ஆதரவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. ஆனால், ராஜ்யசபா அமைந்ததில் இருந்து, 72 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக சபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்ட விதிகள் சொல்வது என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் 67பி பிரிவின்படி, ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இதற்கான தீர்மானம், ராஜ்யசபாவில் பெரும்பான்மையுடன் நிறைவேற வேண்டும். அந்த தீர்மானத்தை, லோக்சபாவிலும் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதற்கு, குறைந்தபட்சம், 14 நாட்கள் அவகாசம் தரப்பட வேண்டும்.மொத்தம், 243 உறுப்பினர்கள் உள்ள ராஜ்யசபாவில், இண்டி கூட்டணியின் பலம், 103ஆக உள்ளது. இவர்களோடு சுயேட்சை எம்.பி.,கபில்சிபலும் உள்ளார்.இவர்கள் அளித்துள்ள நோட்டீஸ் ஏற்கப்பட வேண்டுமெனில், 14 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20ம் தேதியுடன், முடிவடைய உள்ளது. இதனால், இந்த நோட்டீசால் எந்த ஒரு பலனும் இருக்கப்போவதில்லை.மேலும், ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனால், தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும், ராஜ்யசபா தலைவர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பதை அம்பலப்படுத்தவே இந்த நம்பிக்கையில்லா தீர்மான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள் தெரிவித்து உள்ளன.- நமது டில்லி நிருபர்-