ஊர் மாறுதல் உத்தரவு வழங்கியும் அமல்படுத்தாததால் கேங்மேன்கள் அவதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில், 474 கேங்மேன்களுக்கு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கி இரண்டு மாதங்களாகியும், இதுவரை அமல்படுத்தாததால், ஊர் மாறுதல் உத்தரவு பெற்ற கேங்மேன்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2021ம் ஆண்டு நேர்முகத் தேர்வு வாயிலாக, 10,000 கேங்மேன் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதில், 9,613 பேர் பணியேற்பு செய்து, இரண்டு ஆண்டு காலம் கேங்மேன் பயிற்சியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். 2023 மார்ச் மாதம் முதல், பயிற்சிக் காலம் முடிந்து கேங்மேனாக பணிபுரிந்து வருகின்றனர்.ஓராண்டு காலம் முடிந்தால் உள் வட்டத்துக்கும், ஈராண்டு காலம் முடிந்தால் வெளிவட்டத்துக்கும் ஊர் மாறுதல் செய்து கொள்ளலாம் என மின்வாரியத்தால் உத்தரவு வழங்கப்பட்டது.எனவே, 'அனைத்து பணியாளர்களுக்கும் ஊர் மாறுதல் உத்தரவு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும். 'ஒன் டைம் ரிலாக்சேஷன்' என்ற தரப்பில், கள உதவியாளர் மற்றும் உள்முகத்தேர்வுக்கு கேங்மேன் பணியாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்' என்று கோரி இவர்கள், கடந்த ஆக., மாதம், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, ஆக., 30ல், 474 பேருக்கு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நீண்ட கால போராட்டத்துக்குப் பின், மாறுதல் உத்தரவு வந்தது என உற்சாகத்தில் இருந்தவர்களுக்கு, அதற்குரிய பலன், இன்றுவரை வழங்கப்படவில்லை.ஏற்கனவே, பல நுாறு கிலோ மீட்டர் கடந்து, குடும்பத்தை பிரிந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் பலர், பணிச்சுமை, மன உளைச்சல், நிதி நெருக்கடியில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த உத்தரவு அமல்படுத்தாமல் இருப்பது, வேதனையை அதிகரித்துஉள்ளது.எனவே, இவர்களுக்கு விரைவில் பணி விடுவிப்பு செய்ய, உயரதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு, தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தலைமை பொறியாளர் - பணியமைப்பு ஆகியோருக்கு, தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. -- நமது நிருபர் --