காங்., - தி.மு.க., வரலாற்று தவறுகள்: தம்பிதுரை பேச்சால் பார்லி.,யில் ரகளை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
''காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள், சொந்த லாபங்களுக்காக, கூட்டுச் சதி செய்து, கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டன,'' என, தம்பிதுரை ராஜ்யசபாவில் பேசியதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியல் குறித்து விவாதம் நடத்த கோரி, எதிர்க்கட்சிகளின் அமளியால், ராஜ்யசபா நேற்று மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் மீண்டும் கூடியதும், கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா மீதான விவாதம் துவங்கியது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு மத்தியில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசினார். அவர் கூறியதாவது: கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 1974ல், அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள் இணைந்து, கச்சத்தீவை, கூட்டுச் சதி செய்து, இலங்கைக்கு தாரை வார்த்ததே இதற்கு காரணம். இந்தியா - இலங்கை இடையே, 1972 மற்றும் 1974ம் ஆண்டுகளில் போடப்பட்ட இரு ஒப்பந்தங்களுமே சட்ட விரோதமானவை. இந்த வரலாற்றுத் தவறை சரி செய்யும் வகையில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'தம்பிதுரை கூறிய கருத்துகளை, சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என்றனர். பதிலுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., - எம்.பி.,க்கள் இணைந்து எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இந்த களேபரத்துக்கு இடையே, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. - நமது டில்லி நிருபர் -