சென்னை: “வேற்றுமையில் ஒற்றுமை காணும், உலகின் உயர்ந்த கலாசாரம் தான் பாரத கலாசாரம்,” என, கர்நாடக மாநிலம் ஹரிஹரபுரா, ஆதிசங்கராச்சார்ய சாரதி லட்சுமி நரசிம்ம பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியா பேசினார்.தருமை ஆதீனம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ் பேராயம் சார்பில், சென்னை காட்டாங்குளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலையில், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்து வருகிறது. வேறெங்கும் இல்லை
நேற்று, 'மெய்கண்டார் வரலாறு, முத்திநிச்சயமும் சிற்றுரையும், சிவஞானபோதக் கட்டுரைகள், தமிழ் இலக்கியங்களில் சமூக மானுடவியல், நந்தனார் சரித்திரம்' ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன.அதில், ஹரிஹரபுரா, ஆதிசங்கராச்சார்ய சாரதி லட்சுமி நரசிம்ம பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியா பேசியதாவது:பாரத கலாசாரம் மிகவும் பழமையானது. இது, வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது. இதுபோன்ற கலாசாரம் உலகில் வேறெங்கும் இல்லை. அதாவது இறைவன் ஒருவனே. அவனுக்கு பல பெயர்களும், வழிபாட்டு முறைகளும் உண்டு என்பதை ஏற்கும் கலாசாரம். அது, சுகத்தையும் அமைதியையும் தருவது. இங்கு சைவம், வைணவம், கவுமாரம், காணாபத்யம், சவுரம், சாக்தம் எனும் ஆறு சமயங்கள், தனித்தனியாக சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர், சூரியன், சக்தியை வழிபடுபவை.சிவனை வழிபடுவதிலேயே, சைவ சித்தாந்தம், ஆகம சைவம், வைதீக சைவம், திராவிட ஆகம சைவம் என, வழிபாட்டு, கோட்பாட்டு முறைகள் வேறுபடுகின்றன. ஆனாலும், அவற்றின் குறிக்கோள், இறைவனை அடைவதும், எல்லாவற்றிலும் சிவம் உள்ளது எனும் தத்துவத்தால் அனைத்தும் ஒன்றுதான்.தேவாரத்தில், 'பொன்னார் மேனியனே' எனத் துவங்கும் பாடல், சிவன் மீதான பக்தியை அன்பாக பொழியும். இப்படிப்பட்ட கலாசாரத்தைக் காக்க, அமைப்பு ரீதியில் நாம் சிவனின் குழந்தைகளாக இனி ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். அன்பேதான் சிவம்
ஜெயேந்திர பூரி மஹாசுவாமி பேசியதாவது:'தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்கிறோம். எல்லா நாட்டவர்க்கும் சிவன் இறைவன்தான். என்றாலும், தென்நாட்டில் அதிக கோவில்களால் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், அவன் தென்னாடுடைய சிவன் ஆகிறான். சிவம் என்பது வேறொன்றுமல்ல; அன்புதான். அன்பேதான் சிவம். அன்பு பேதம் பார்க்காதது. என் மதம் பெரிது; என் கடவுள் பெரியவன் என்ற எண்ணத்தால் தான், உலகம் போரால் பேராபத்தை எதிர்நோக்கும் காலமாக மாறுகிறது. அனைத்திலும், அனைத்து உயிர்களிலும் இறைவன் உள்ளான் என, சைவ சித்தாந்தம் போதிக்கிறது. அதை உணராததால் தான், போட்டியும், பொறாமையும், போர்களும் வருகின்றன. உலகம் அமைதியடையும் மனமாற்றத்துக்கானது தான் இந்த மாநாடு.இவ்வாறு அவர் பேசினார்.திண்டுக்கல், சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:குழந்தைகள் விரும்பியதை எல்லாம் பெற்றோர் உண்ணக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு எவை உகந்ததோ, அவற்றைத்தான் கொடுப்பர். அதுபோல் தான் இறைவனும், நாம் கேட்டதை எல்லாம் கொடுக்க மாட்டார். நமக்கு தேவையானதை கண்டிப்பாக கொடுப்பார். நாம் எதைக் கேட்க வேண்டும்; எதைக் கேட்கக்கூடாது என்பனவற்றையும், இறைவன் மீதான அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நம் சைவ சித்தாந்தம் விளக்குகிறது.இவ்வாறு அவர் பேசினார். மூத்த கலாசாரம்
உயர் நீதிமன்ற நீதிபதி சிவ.சவுந்தர் பேசுகையில், “சைவ சித்தாந்த நுால்களுக்கான விளக்கங்கள், 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்டவையாக உள்ளன. அவற்றை, 21ம் நுாற்றாண்டு மாணவர்கள் படிக்கும் வகையில், தற்கால நடையில், தற்கால சொற்களால் மாற்றி மறுபதிப்பு செய்ய, தருமை ஆதீனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.ஜப்பான் பாலகும்ப குருமணி பேசுகையில், “நாங்கள், சைவ சமய கருத்துகளை படித்ததால் ஈர்க்கப்பட்டு, ஜப்பானில் கோவில்களை கட்டி உள்ளோம். இந்தியாவிலும் கோவில்களை கட்ட உள்ளோம். ''தருமையாதீனத்தின் வாயிலாக, பூஜைகள், தமிழ் வேதங்களின் பொருள், யோகா, சித்தா உள்ளிட்டவற்றை அறிந்துள்ளோம்,” என்றார்.மொரீஷியஸ் பேராசிரியர் சிவன் நாராயண பிள்ளை பேசுகையில், “மொரீஷியஸ் நாட்டில், 300 ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்கின்றனர். ''முதல் தலைமுறையினர் எடுத்துச் சென்ற தெய்வ விக்கிரகங்கள் இன்று கோவில்களாக உள்ளன. 10 லட்சம் பேர் உள்ள தீவில், 85,000 தமிழர்கள் வாழும் நிலையில், மூத்த கலாசாரம் உள்ள சமூகமாக உள்ளோம். தைப்பூச காவடி நாளில், தேசிய விடுமுறை உள்ளது,” என்றார்.