உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களை அலைக்கழித்த போலீஸ்: வெள்ளை அறிக்கை கேட்டது தான் காரணமா?

கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களை அலைக்கழித்த போலீஸ்: வெள்ளை அறிக்கை கேட்டது தான் காரணமா?

கூவம் நதி மறுசீரமைப்பு திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை தர வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கேட்டதை, தி.மு.க., மேலிடம் விரும்பாததால், அவரது ஆதரவாளர்களை இமானுவேல் சேகரன் குருபூஜையில் காக்க வைத்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் குருபூஜை, நேற்று முன்தினம் பரமக்குடியில் நடந்தது. அவருடைய சமாதிக்கு சென்று மரியாதை செலுத்த, தமிழக காங்கிரசாருக்கு காலை 11:00 மணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி தரப்பட்டது.

காரை மறித்த போலீஸ்

அமைச்சர் உதயநிதி வருகையை காரணம் காட்டி, காங்கிரசாருக்கு அனுமதிக்கப்பட்ட நேரம், காலை 9:45 மணிக்கு மாற்றப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன், சிவகங்கை எம்.பி., கார்த்தி மற்றும் ஆதரவாளர்கள் ஒன்பது வாகனங்களில் பரமக்குடிக்கு அணிவகுத்து சென்றனர்.அவர்கள் அனைவரின் வாகனங்களும் 9:30 மணிக்கு பரமக்குடிக்கு சென்றதும், காரை மறித்த போலீசார், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட சிலர் வந்த மூன்று வாகனங்களை மட்டும் சமாதிக்கு செல்ல அனுமதித்தனர். விஸ்வநாதன், கார்த்தி சென்ற வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தியதும், விஸ்வநாதன் காருடன் சேர்த்து 2 வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. போராட்டம் காரணமாக, குறித்த நேரத்தில் காங்கிரசார் மரியாதை செலுத்த முடியாமல், சில மணி நேரம் காத்திருந்தனர். அவர்களுக்கான பாதுகாப்பும் சரிவர செய்யப்படவில்லை என காங்கிரசார் கொந்தளித்தனர். போலீஸ் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த செல்வப்பெருந்தகை, 'எங்களை போன்ற அரசியல் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. 'போலீசார் ஏன் இவ்வளவு அலட்சியப் போக்குடன் இருக்கின்றனர் என்பதும் புரியவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்களுக்கே இது தான் மரியாதையா' என்றெல்லாம் கேட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை கார்த்தி ஆதரவாளர்கள் வந்த காரை அனுமதிக்காமல் போலீசார் திருப்பி விட்டதால், அவர்களும் அதிருப்தி அடைந்தனர்.

திட்டமிட்டு புறக்கணிப்பு

இதுகுறித்து, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: சென்னை கூவம் ஆற்றின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு, சென்னை மேயர் பிரியாவுக்கு கார்த்தி கடிதம் எழுதினார். இதை தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை.வரும் 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பின் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்; அதில், காங்.,குக்கு முக்கிய பங்கு கொடுக்க வேண்டும், அமையும் ஆட்சி காமராஜர் ஆட்சியாக இருக்க வேண்டும் என, கார்த்தி உள்ளிட்டோர் எதிர்காலம் குறித்தும், பல்வேறு விஷயங்களை இப்போதே வலியுறுத்தத் துவங்கி இருப்பதும் தி.மு.க., தரப்புக்கு பிடிக்கவில்லை.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் சட்ட ஆலோசகர், கார்த்தியின் உறவினர் ஒருவரிடம் பணியாற்றியவர். அந்த ஆலோசகர் வாயிலாக, அ.தி.மு.க., - காங்., கூட்டணி வாய்ப்பு பற்றி பேசப்பட்ட தகவலும் தி.மு.க., மேலிடத்திற்கு தெரிய வந்துள்ளதால், கார்த்தியை, அவரது ஆதரவாளர்களையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் நடவடிக்கைகளை ஆளுங் கட்சி எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
செப் 13, 2024 10:56

இம்மானுவேல்? கிருஸ்தவர்கள் எப்போது குருபூஜை செய்யத் துவங்கினர்?. பைபிளில் உள்ளதா?


Ms Mahadevan Mahadevan
செப் 13, 2024 09:54

அரசியலில் இது எல்லாம் தான் இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் அதிக சீட்டு வாங்கணும் என்றால் ஆளும் கட்சியை கண்ணில் விரல் விட்டு ஆட்டனும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை