உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பணம் செலுத்தியும் பால் வினியோகம் இல்லை; செயலிழந்த ஆவின் செயலி

பணம் செலுத்தியும் பால் வினியோகம் இல்லை; செயலிழந்த ஆவின் செயலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஆவினில் பால் அட்டை புதுப்பித்தல்கட்டணம் செலுத்தபுதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள குளறுபடி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் பால் விலை குறைவு என்பதால், பல ஆயிரம் பேர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். அடுத்த மாதத்திற்கான பால் கட்டணத்தை ஒரு மாதம் முன்பே செலுத்த வேண்டிய நிலையில், தற்போது புது செயலி (ஆப்) வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என, ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ளது.இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு எந்தவிததெளிவான அறிவிப்பும் வழங்கப்படவில்லை. புதிய செயலியில் கட்டணம் செலுத்திய பலரது பெயர்கள், பால் வினியோக பூத் முகவர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், பணம் செலுத்தியும் பால் கிடைக்காமல் பெரும்பாலானோர் அலைக்கழிக்கப்படுகின்றனர். முன்பு, மண்டலத்திற்கு ஒரு ஆவின் அலுவலகம் இருந்த நிலையில், தற்போது ஆர்.எஸ்.புரத்தில் மட்டும் அலுவலகம் செயல்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட தூரம் பயணித்து, புகார் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், 'டிஜிட்டல் முறையை ஏன் கட்டாயமாக்க வேண்டும்? ஏப்ரல் மாதத்திற்கு இரு அட்டைகளுக்கு தலா, 1,652 ரூபாய் செலுத்திவிட்டேன். ஆனால், ஆப்பில் மீண்டும் பதிவு செய்ய சொல்கின்றனர். அதனால், பால் வினியோகத்தை நிறுத்திவிட்டனர். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய, 17 நடைமுறைகள் உள்ளன. இது முதியவர்களுக்கும் பாமர மக்களுக்கும் சாத்தியமா?' என,கேள்வி எழுப்பினார். மற்றொருவர் கூறுகையில், 'மாதத் தொடக்கத்தில் மூன்று நாட்கள் பால் வழங்கவில்லை. அந்த மூன்று நாட்களுக்கான கட்டணமும் திருப்பி தரவில்லை. ஆப்பில் ஏற்பட்ட கோளாறால் குறைந்தது 10 பேருக்கு பால் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முகவர்கள் கைவிரிக்கின்றனர்' என்றார். கோவை மாவட்ட ஆவின் பொறுப்பு மேலாளர் சண்முகம் கூறுகையில், ''டிஜிட்டல் முறைக்கு மாற்றும்போது ஆரம்பக்கட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது இயல்பு. போலியான முகவர்களைக் கண்டறியவே இந்த ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. புகார்கள் தெரிவித்தால் உடனடியாகச் சரி செய்யப்படும்,'' என்றார்.

2 லிட்டர் கட்டுப்பாடு?

ஆவின் 'ஆப்' பிரச்னையால், மக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக ஒரு பால் அட்டைதாரருக்கு ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கு மேல் பால் வழங்கப்படாது என்ற புதிய விதியை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், தினசரி 2.5 லிட்டர் அல்லது அதற்கு மேல் பால் தேவைப்படும் குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. நவீனமயமாக்கல் என்ற பெயரில் எவ்வித திட்டமிடலும் இன்றி எடுக்கப்படும் முடிவுகளால், சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !