UPDATED : மே 29, 2025 06:51 AM | ADDED : மே 29, 2025 06:25 AM
திருச்சி: கரூரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒரு அணியாக வடிவம் பெறவில்லை; ஆளுக்கு ஒரு திசையில் சிதறி, உதிரிகளாக கிடக்கின்றன; ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும் நிலையில் இருக்கின்றன. தி.மு.க., தலைமையிலான அணி தான் கூட்டணி வடிவம் பெற்று, வலுவாக உள்ளது. அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து இருப்பதாக சொன்னாலும், அவர்களுக்குள் பிணைப்பு ஏற்படவில்லை. அமித் ஷா, பழனிசாமி ஆகியோர் சந்திப்புக்கு பின், இரு கட்சிகளும் எல்லாவற்றிலும் தனித்தனியாகத்தான் இயங்குகின்றன; இணைந்து செயல்படவில்லை. அமித் ஷா, 'கூட்டணி ஆட்சி' என கூறி விட்டு சென்றார். 'நாங்கள் அப்படி சொல்லவே இல்லை' என்று பழனிசாமி கூறினார். அதிலேயே அவர்களுக்குள் முரண்பாடு இருப்பது தெரிகிறது. தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியாவது, பல்கலைக்கழக முறைகேடுகளை, பலவீனங்களை வெளிப்படுத்துகிறது. வினாத்தாளை மாற்றி, வேறு ஒரு நாளில் தேர்வு நடத்த வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆறுதலை தருகிறது. நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துகளை கூறுவது வியப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் நேர்மையாகத்தான் விசாரணை நடந்துள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்; சி.பி.ஐ., விசாரணை கேட்கலாம். தமிழ் தான், திராவிட மொழிகளின் தாய் என்பதை தமிழ் அறிஞர்களும், மொழியியல் வல்லுநர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம். ஆனால், வரலாறு வரலாறு தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.