உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு: காங்., நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு: காங்., நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில், கூட்டணி ஆட்சி குறித்த அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் வெளியிட்ட நிலையில், 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகி ஒட்டிய போஸ்டர், தி.மு.க., கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன; கூட்டணி பேச்சு நடத்தி, அதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

கூட்டணி ஆட்சி

ஆளுங்கட்சியான தி.மு.க., கூட்டணியில், காங்., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள், ம.நீ.ம., மற்றும் சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன.தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் இடம் பெற வைப்பதற்கான முயற்சியில், பா.ஜ., டில்லி மேலிடம் ஈடுபட்டுள்ளது. கடந்த 11ம் தேதி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.த.வெ.க., தலைவர் விஜய், தன் தலைமையில் அமைக்கப்படும் கூட்டணியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் சேர்ந்து, கூட்டணி ஆட்சி அமைப்போம் என, அறிவித்துள்ளார்.'ஆட்சியில் பங்கு' என்ற கோஷத்தை, வி.சி., தலைவர் திருமாவளவன் வரவேற்றுள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியும், கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை வலியுறுத்த துவங்கி உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் மாநில செயலர் ஷெரீப் ஒட்டியிருந்த போஸ்டர்களில், 'ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர், தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில், தி.மு.க., 200 தொகுதிகளை வெற்றி இலக்காக வைத்துள்ள நிலையில், காங்கிரசின் கூட்டணி ஆட்சி கோஷம், தி.மு.க., தொண்டர்களை கடும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்த காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, போஸ்டர் ஒட்டிய ஷெரீபிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

சதி திட்டம்

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., கூட்டணி ஒற்றுமையை குலைக்க, பல்வேறு சதி திட்டங்களை தீய சக்திகள் தீட்டி வருகின்றன. ஒற்றுமையாக இருக்கும் காங்., - தி.மு.க., கூட்டணியில், குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ள வாசகங்கள் கண்டிக்கத்தக்கவை.கூட்டணி குறித்து பேச, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. உங்களுடைய அநாகரிகமான செயல் மட்டுமல்ல; ஒழுங்கீனமான செயலுமாகும். குமரி அனந்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஏழு நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், என் பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளேன். என் பிறந்த நாளையொட்டி, தாங்கள் ஒட்டிய சுவரொட்டி, விளம்பர செயல். இது, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டது. இதற்கான தகுந்த விளக்கத்தை, 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து அளிக்க வேண்டும்.தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்து பேசி, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் நடவடிக்கையா?

போஸ்டர் ஒட்டிய ஏ.வி.எம்.ஷெரீப், மறைந்த முன்னாள் தலைவர் இளங்கோவனின் தீவிர ஆதரவாளர். இவர், சென்னையில் காலியாக உள்ள தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பதவியை கேட்டு, கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்துள்ளார். இன்று செல்வப்பெருந்தகைக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டிய போஸ்டரில், '2026ல் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை' என குறிப்பிட்டுள்ளார். செல்வப்பெருந்தகை கவனத்தை ஈர்க்க ஒட்டிய போஸ்டர், தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விட்டது. 'ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு' என போஸ்டர் அடித்த ஷெரீபுக்கு மாவட்ட தலைவர் பதவி கிடைக்குமா அல்லது கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு, காங்கிரஸ் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

naranam
ஏப் 14, 2025 12:49

திரைப்படங்களில் வருவது போல என்ன பங்கு என ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு எந்த பங்கும் கிடைக்காது.


Haja Kuthubdeen
ஏப் 14, 2025 10:27

காங்கிரசுக்கு 10 அல்லது 15 சீட்தான்...இதில் துனை முதல்வர் ஆசையா...


vijay
ஏப் 14, 2025 09:42

மூணு சீட்டா அல்லது நான்கு சீட்டா திமுக இவர்களுக்கு ஒதுக்கப்போவது இதுல ஆட்சியில் பங்காம்ல


பேசும் தமிழன்
ஏப் 14, 2025 09:19

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கான் கிராஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்.. இப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை.. கொடுப்பதை வாங்கி கொண்டு அறிவாலய வாசலில் கிடப்பார்கள். அதிமுக பக்கம் சென்று விடுவார்கள் என்று பேரம் பேச முடியாது.....அந்த வழி அடைக்கப்பட்டு விட்டது.


Malan Iyengaar, Matenee
ஏப் 14, 2025 09:45

கூட்டணியிலேயே பலமான கட்சியை வெளியேற்ற சதி செய்கிறீர்கள். திருமா, கமல், வைகோ, கம்மிகள் எல்லோருக்கும் ஒரு சதவீதத்துக்கும் கீழே தான் ஓட்டு. இரட்டை இலக்க ஓட்டை கொண்ட ஒரே கூட்டணி கட்சி காங்கிரஸ் தான்.


அப்பாவி
ஏப் 14, 2025 08:13

ஆட்டையிலும் பங்கு.


Kalan Iyengaar, Kidney
ஏப் 14, 2025 07:44

இதுல என்ன தப்பிருக்கு? செல்வப்பெருந்தகை வந்த பிறகு தமிழ்நாட்டில காங்கிரஸ் பலம் கூடியிருக்கு. திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் மட்டும் தான் பலமானது. தனித்து நின்றால் மற்ற கட்சிகள் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்கு பெறும். காங்கிரஸ் ஓட்டு இல்லாமல் திமுக பெரும்பான்மை பெற முடியாது என்பது நிதர்சனமான உண்மை.


Haja Kuthubdeen
ஏப் 14, 2025 10:34

நீங்க சொல்வதில் உண்மை இருக்கு...திமுக கூட்டணியில் ஓரளவு பரவலான ஓட்டு வங்கி உள்ளது காங்கிரஸ் மட்டுமே...காங்கிரஸை நம்பியே சிறுபாண்மை மக்கள் திமுகவிற்கு ஓட்டு போடுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை