உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2026ல் தமிழக சட்ட சபைத் தேர்தல்: டாப் கியரில் கட்சிகள்

2026ல் தமிழக சட்ட சபைத் தேர்தல்: டாப் கியரில் கட்சிகள்

வரும் 2026ல் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நிறைவடைந்தது முதலே, சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாவதில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. கூட்டணிக் காட்சிகள் மாறலாம் என்றாலும், தங்கள் நிலைகளை வலுப்படுத்துவதிலும், வாக்கு வங்கியைத் தக்கவைப்பது மற்றும் உயர்த்துவதிலும் கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தத்தில் கவனம்; வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்பு, இளம் வாக்காளர் மீது அக்கறை என திருப்பூரில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் களத்தில் சுறு சுறுப்பாகியுள்ளனர்.

வீட்டுக்கு வீடு பலன் தி.மு.க.,வின் யுத்தி

தினேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க., செயலாளர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியன அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆட்சியின் ஏதாவது ஒரு திட்டம் கட்டாயம் சென்று பலன் அளித்துள்ளது.இதுகுறித்து வீட்டுக்கு வீடு தெளிவாக எங்கள் பிரசாரம் அமையும். வாக்குச்சாவடி முகவர் குழுவைப் பொறுத்தவரை எங்கள் தொகுதியில் உள்ள 386 வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியில் தேர்தல் பிரிவினருடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இத்தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என தலைமை அறிவித்துள்ளது. அதை நோக்கி கட்சியினர் பணியாற்றி வருகிறோம்.

ஆதரவு வாக்காளர்கள் அ.தி.மு.க., வியூகம்

குணசேகரன், மாநில இணைச் செயலாளர், அ.தி.மு.க., - ஜெயலலிதா பேரவை: ஒவ்வொரு நிர்வாகியும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம் வாக்காளரை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், வாக்காளர் பட்டியல், பகுதி வாரியாக பிரித்து, பகுதி செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் களப்பணியில் ஈடுபடுகின்றனர்.புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பில், கட்சியின் முகவர்கள், உதவ வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 செப்., 30ம் தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தி யடையும் நபர்களை கண்டறிந்து, வாக்காளராக பெயர் பதிவு செய்யவும் தனி குழு அமைத்துள்ளோம்.வார்டு மற்றும் கிளை 'பூத் கமிட்டி' வாரியாக, வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து, ஏற்கனவே உள்ள அ.தி.மு.க., ஆதரவு வாக்காளர் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இளம் வாக்காளர்களை கண்டறிந்து, அவர்கள் பெயர்களை சேர்க்கவும், குடிபெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்துகிறது பா.ஜ.,

செந்தில்வேல், தலைவர், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,: முழுவீச்சில் பா.ஜ., களமிறங்கியுள்ளது. புதிதாக கிளை தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கிளை தலைவருக்கான தேர்வு இன்று நடக்கிறது. பிரதமரின் மனதின் குரல், சமூக வலைதளம், வாக்குச்சாவடி என, ஒவ்வொரு துறையாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அளவில் வலுப்படுத்த அனைத்துவிதப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.மக்களுடன் தொடர்பில் இருப்பவர், சேவை போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு நியமனம் நடைபெறும். தற்போது வரை திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் என, மூன்று தொகுதிகளிலும், 60 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை வருகைக்காக காத்திருக்கிறோம். அவர் வந்த பின், வரும் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடக்கும்.

வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் சேகரிப்பில் காங்.,

கோபால்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்: காங்கிரஸ் முதுபெரும் கட்சி என்பதால், ஏற்கனவே பல பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர் குழு அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அவற்றில் ஏதேனும் மாறுதல் செய்ய வேண்டியிருப்பின், அதற்கான பணிகளை துவக்கியுள்ளோம்.திருப்பூர் வடக்கில், 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கில், 280க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம், 580க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு யார், யார் பணிபுரிய வேண்டும், மாறுதல் செய்ய வேண்டியிருக்குமா என்பது மாநில தலைமை கேட்டுள்ளது. அதற்கான விபரங்களை பட்டியல் சேகரித்து, தனிக்குழு அமைத்து தயாரித்து வருகிறோம்.வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலில் எப்படிக் களம் காணப்போகிறோம் என்பதை தொடர்ந்து, வெற்றிக்கான வியூகங்களை காங்கிரஸ் வகுக்கும்.

இளைஞர்கள் படை'நாம் தமிழர்' திட்டம்

சுரேஷ் பாபு, மாநில இணைச் செயலாளர், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை: சட்டசபை தேர்தலுக்கான பணிகள், ஒவ்வொரு மாவட்ட அளவிலும், 234 தொகுதி அளவிலும் ஓராண்டுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது. வாக்குச்சாவடி அளவில் உறுப்பினர்களை கூடுதலாக சேர்த்து, பொறுப்பாளர் நியமனம் தொடர்ந்து வருகிறது.இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இளைஞர்கள் பத்து பேர் இருக்கும் வகையில், அமைப்பு அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆறு மாதமாக கட்சி தலைவர் சீமான் இதை நேரடியாக கண்காணித்து, மாநிலத்தின் ஒருபகுதியை நிறைவு செய்து, மற்றொரு பகுதியில் பயணித்து வருகிறார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு த.வெ.க., சார்பில் அறிக்கை

பாலமுருகன், தலைவர், திருப்பூர் மத்திய மாவட்ட த.வெ.க.,: கட்சியின் மாநில மாநாடு நாடே வியக்கும் வகையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மண்டல மாநாடுகள் நடத்தப்படும். இதன் மூலம் மக்கள் மனதில் என்ன எண்ண ஓட்டம் உள்ளது என்பது தெளிவாகும். தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை அனைத்து தொகுதியிலும் வாக்குச்சாவடி முகவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய பகுதியைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றிய கட்சியினர் இதில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் தொகுதி வாரியாக 5 ஆண் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட குழு அனைத்து தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து பகுதிவாரியாக உள்ள குறைகள், ஒட்டு மொத்த மாவட்ட மற்றும் மாநில அளவிலான எதிர்பார்ப்பு மற்றும் தேவைகள் குறித்து கேட்டறியப்படும். திருப்பூரைப் பொறுத்த வரை கடந்த 3 ஆண்டாக தொழில் நிலவரம் சரியாக இல்லை. பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கருத்து பெறப்படும்.இவை கட்சி தலைமைக்கு அறிக்கையாக அளிக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதியில் அவற்றை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Oviya Vijay
நவ 11, 2024 06:57

திமுக கூட்டணித் தலைவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் (எதிர்கட்சிகள்) யாரும் இல்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லிக்கொள்ளும் படியான வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை. அதற்கு சாட்சி திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வென்றது. திமுகவுக்கு எதிர் அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா என்பதைத் தான். அதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு மிக மிக குறைவு. இதே கூட்டணி தான் அப்படியே அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும். அதற்கான காரணங்கள் பல உண்டு. ஒன்று காங்கிரஸ் எந்த வலுவான காரணங்கள் இன்றி திமுக கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆட்சியில் பங்கு என்னும் விஜயின் கருத்தை செல்வப் பெருந்தகை வரவேற்பதாக சொல்கிறாரே தவிர டெல்லி தலைமையின் முடிவை ஏற்காமல் விஜயுடன் கூட்டணி வைக்க போவதாக அறிவிக்கிறார் என்று இதற்கு அர்த்தமில்லை. 1996 மத்திய தலைமையின் முடிவை எதிர்த்து மூப்பனார் வெளியேறியதைப் போன்று திறன் மிக்க தலைவர்கள் தற்போது மாநிலத் தலைமையில் எவரும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் ஸ்டாலினை சந்திக்கச் செல்லும் முன் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு சென்ற ஒரு சிறு நிகழ்வு மொத்த மீடியாவையும் புரட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் எழுந்த நேர்மறையான விமர்சனங்கள் காங்கிரஸ் திமுக இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை இந்த நாடே வியந்து பார்த்தது... ராகுல் பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியே வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் வெளியேறினால் திமுக கூட்டணியில் பாமக உள்ளே வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி செல்லாக்காசாக யார் விரும்புவார். மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மற்றும் பிற உதிரிக் கட்சிகளும் தாங்கள் இருக்கும் இடமே சுகம் என்பது போல இருக்குமேயன்றி ஒருபோதும் இந்த கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆனால் 2026 தேர்தலில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது. அது என்னவென்றால் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகப்பெரிய ஒட்டு வங்கியை பெறப்போகிறது என்பது உண்மை... எப்படியெனில் சென்ற தேர்தல் வரை தமிழகத்தில் ஏதாவது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் எந்த கட்சியையும் சார்ந்திராத மக்களின் ஓட்டுக்கள், திமுகவில் இருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், பிஜேபியை சார்ந்த ஆட்டுக்குட்டியின் புகழ் பாடி களைத்துப் போன நடிகர் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், தொம்பிகளை மட்டும் நம்பி ஒவ்வொரு முறையும் களமிறங்கும் சீமான் கட்சியைச் சார்ந்த விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், நங்கூரமின்றி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிமுகவிலிருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் என பலதரப்பட்ட ஓட்டுக்கள் வந்து குமியப் போகிறது. ஏனென்றால் ரசிகர்களைப் பொறுத்தவரை இவ்வளவு நாட்கள் இருந்த கட்சி பெரிதா இல்லை தனக்கு பிடித்த சினிமா நட்சத்திரம் புதிதாக ஆரம்பிக்கும் கட்சி பெரிதா என்றால் சினிமா நட்சத்திரத்திற்கு தான் முதலிடம்.... ஏற்கனவே குறிப்பிட்டது போல... மேலே குறிப்பிட்டோரின் ஓட்டுக்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தவெக கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் பெரும் எழுச்சி பெற்று நடிகர் விஜய் முன்னேறிச் செல்ல இது வழிவகுக்கும். 2011 ல் எப்படி தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றதோ அதே போல விஜய் கட்சி கூடிய விரைவில் உருவெடுக்கும்... விஜய் கட்சியினால் பெருத்த அடி வாங்கப் போவது மூன்று கட்சிகள்... 1. அதிமுக, 2. பிஜேபி 3. நாதக. அதிமுகவில் பிரிந்து கிடக்கும் யாவரும் ஒன்றிணைந்தால் கூட இனி அதிமுகவிற்கு எதிர்காலம் கிடையாது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல தமிழிசை தாம் வகித்த கெளரவம் மிக்க பதவியையும் மத்திய பிஜேபி கொடுத்த அழுத்தத்தினால் உதறி விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்று நொந்து கிடக்கிறார்... வேற்று மாநிலத்தின் MLA க்களின் உதவியால் மட்டுமே ராஜ்யசபா MP பதவியின் மூலமாக மத்திய அமைச்சர் பதவி பெற்றிருக்கும் L போர்டு முருகன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... இரண்டாம் முறையாக தமிழகத்தில் போட்டியிட்டு தொடர் தோல்வி... நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வீட்டு வாடகை உட்பட தன் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஆட்டுக்குட்டி மீடியாக்கள் முன்பு வாய்ச் சவுடால் பேசுவது ஒன்றே தன் மூலதனமாக வைத்துள்ளது. தமிழக பிஜேபியில் பொன் ராதாகிருஷ்ணனை தவிர ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண்பது அரிது. அவரையே இந்த தமிழக மக்கள் தோற்கடிக்கிறார்கள்... ஆகவே மாற வேண்டியது கூட்டணி அல்ல... மக்கள் மனநிலை ஒன்றே... உட்கட்சி பூசலில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 2026 தேர்தல் தனித்து நிற்கும் கடைசித் தேர்தலாக அமையலாம். நடிகர் விஜய் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க விரும்பாத கட்சிகள் மூன்று... திமுக, அதிமுக மற்றும் பிஜேபி... இவைகள் தவிர்த்து ஆட்சி அமைக்கும் வண்ணம் சாதகமான சூழ்நிலை உருவாக தவெகவுக்கு சில காலம் ஆகலாம். அதுவரை அந்த கட்சியின் செயல்பாடுகளை மற்ற கட்சிகள் உற்று நோக்குமே தவிர அதிரடி முடிவெடுக்கும் நிலை தற்போதைக்கு யாருக்கும் இல்லை. 1996 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் அதிமுக உடனான கட்சித் தலைமையின் கூட்டணி முடிவை மறுத்து கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து மிக மிகக் குறுகிய காலத்தில் அதற்கு கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்களின் மனதில் இடம்பெறச் செய்து அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திடச் செய்த மூப்பனார் நிகழ்த்தியது போன்ற ஒரு மாயஜாலம் மீண்டும் நிகழ்ந்தால் ஒழிய வலுவான எதிர்க்கட்சி உருவாவது சந்தேகமே... அதுவரை அனைத்து கட்சிகளும் உதிரிக் கட்சிகளே... அதுவரை எந்த மாற்றமும் இருக்காது இந்த தமிழகத்தில்...


புதிய வீடியோ