உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போக்சோ சம்பவங்கள் குறைவது பெற்றோர் கைகளில் இருக்கு! விழிப்புணர்வால் வழக்கு அதிகரிப்பு!

போக்சோ சம்பவங்கள் குறைவது பெற்றோர் கைகளில் இருக்கு! விழிப்புணர்வால் வழக்கு அதிகரிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, இரு மடங்கு அதிகரித்துள்ளது. மிகவும் அதிர்ச்சி அளிக்கும் இந்த தகவல் குறித்து நம்மிடம் பேசிய போலீசார், 'எல்லாம் பேரன்ட்ஸ் கையிலதாங்க இருக்கு; தினமும் குழந்தைங்ககிட்ட ஒருமணி நேரமாவது பேசினால், போக்சோ குற்றங்களை தடுக்கலாம்' என்கின்றனர்.சிறுவர், சிறுமியருக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 2012ம் ஆண்டு நவ., மாதம் போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் அளிப்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமைகள், பல வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர், அவர்களின் பெற்றோர் வெளியில் சொல்ல தயங்குகின்றனர். இது குற்றவாளிகளுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. பெரும்பாலான சம்பவங்களில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், நன்கு பழக்கமானவர்களாகவே இருந்துள்ளனர். சமீபத்தில் அன்னுார் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போல், தினசரி பல வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை தடுக்க, அரசு தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் வந்த பிறகு, அவர் அறிமுகம் செய்த திட்டங்களாலும், கடும் நடவடிக்கைகளாலும் பல போக்சோ சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளன.கோவை மாநகர போலீசார், பெண் போலீசார் மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, 'குட் டச், பேட் டச்' குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வழக்குகள் அதிகரிப்பு

அதே நேரம் தொடர் விழிப்புணர்வு காரணமாக, போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டு 85 போக்சோ வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு, அக்., 31ம் தேதி வரை 156 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதில், 84 வழக்குகள் காதல் தொடர்பாக, வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பான வழக்குகள். 2022ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில், 50 சதவீதத்திற்கு மேல் காதல் பிரச்னை சம்பந்தமான வழக்குகள். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மாநகர போலீஸ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் மாணவியர், மாணவர்கள் அதை உடனே பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்படுவோரின் அடையாளங்கள், வெளியில் தெரியாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதனால் தான் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,'' என்றார். போக்சோ சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக நடக்காமல் இருக்க, போலீசார் நினைத்தால் மட்டும் போதாது; பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும்.

பேசுங்க!

'தாய், தந்தை பிரிந்து வாழும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளில் பலர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். வேலை, வீட்டு பணி என 'பிஸியாக' இருக்கும் பெற்றோர் மற்றும் சிங்கிள் பேரன்ட், தினசரி தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களின் அன்றாட நிகழ்வுகளை கேட்டறிய வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருந்தால் கண்காணிக்க வேண்டும்' என்கின்றனர் போலீசார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

saam
டிச 04, 2024 14:15

sex education is the only solution


அப்பாவி
டிச 04, 2024 07:42

எத்தனை பேருக்கு தண்டனை கொடுத்தீங்க? பொக்ளாச்டி வழக்கையே இழுத்து மூடின மாதிரி இருக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை