உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்தனைக்களம்: எப் - 35 போர் விமானம் இந்திய விமானப்படைக்கு ஏற்றதா?

சிந்தனைக்களம்: எப் - 35 போர் விமானம் இந்திய விமானப்படைக்கு ஏற்றதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு சொந்தமான 'எப் - 35' ஜெட் விமானம், கடந்த மாதம் 14ம் தேதி, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தீர்க்கமுடியாத தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, 25 நாட்களுக்கும் மேலாக, அந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்க முடியாததால், அதை பிரித்தெடுத்து, ராணுவ சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப் படையை மேம்படுத்தும் விதமாக, 114 அதிநவீன போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒருபுறம் திட்டமிட்டுள்ளது. மறுபுறம், இந்திய கடற்படையும், அதுபோன்ற அதிநவீன போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, எப் - 35 ரக போர் விமானத்தை நமக்கு வழங்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது. இந்த சூழலில், பிரிட்டன் நாட்டு எப் - 35 விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பழுதடைந்து நின்றுள்ளது பல்வேறு கேள்விகளை மட்டுமின்றி, பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

பல்வேறு அம்சங்கள்

உலகிலேயே விலை உயர்ந்த போர் விமானமான எப் - 35, ஐந்தாம் தலைமுறையை சேர்ந்தது. அமெரிக்கா, சீனா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த போர் விமானத்தை பயன்படுத்தி வருகின்றன. எதிரிகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டும் திறன் கொண்ட இந்த விமானம், சில நொடிகளில் அவர்களை ஏமாற்றி இலக்குகளை நோக்கி பயணிக்கும் ஆற்றல் உடையது. மேம்பட்ட 'ரேடார்' மற்றும் 'சென்சார்' பயன்பாடு, ஒருங்கிணைந்த விமான மின்னணுவியல் என பல்வேறு அம்சங்கள் எப் - 35ல் நிறைந்துள்ளது. 'சூப்பர் க்ரூஸ்' எனப்படும் ஒலியின் வேகத்தை விட அதிவேகத்தில் பறக்கும் திறனையும் இது பெற்றுள்ளது. நவீனமயமான ஆயுதங்களையும் தன்னிடத்தே மறைத்து வைத்து, தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தும் வித்தையையும் இந்த விமானம் கற்றுள்ளது. அமெரிக்காவின், 'லாக்ஹீட் மார்ட்டின்' நிறுவனம் வடிவமைத்து தயாரித்த இந்த விமானம், அமெரிக்க ராணுவம், பிரிட்டன், ஆஸ்திரேலியா, 'நேட்டோ' நாடுகள் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. இந்த ரக விமானம், குறுகிய துாரத்தில் புறப்படும் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன் உடையது. குறிப்பாக, விமானம் தாங்கி கப்பலில், சிறிய ஓடுபாதையில், செங்குத்தாகவே இறங்கும் வல்லமை படைத்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த போர் விமானம், இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, பிரிட்டன் கடற்படையின் 'ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் வாயிலாக இந்தியா வந்தது. பயிற்சியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே, இது திருவனந்தபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கப்பலுக்கு திரும்பாதது ஏன்?

நவீன உபகரணங்களுடன் சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்ட விமானம், பழுதானதை அடுத்து, போர் கப்பலுக்கு செல்லாமல், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தது ஏன்? எவ்வளவு நவீனமயமான விமானமாக இருந்தாலும், பழுது ஏற்படுதல், இன்ஜின் செயலிழப்புகள் போன்ற அவசர நிலை எந்த நேரத்திலும் ஏற்படலாம்; இருப்பினும், ஏன் அந்த விமானம் போர்க் கப்பலுக்கு செல்லவில்லை?இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. விமானம் பழுதானபோது, போர்க்கப்பலை விட திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில் இருந்திருக்கலாம்; செங்குத்தாக பயணிக்கும் இந்த விமானத்தை உடனடியாக வேறு திசையில் திருப்ப முடியாமல் போயிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றிற்கு எல்லாம் மேலாக, எரிபொருள் தட்டுப்பாடும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. செங்குத்தாக இறங்குவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படும் என்பதால், இருக்கும் எரிபொருளில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க விமானி முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பயிற்சிக்காக வந்த விமானத்தின் எரிபொருள் விரைவில் தீர்ந்தது ஏன்? விமானம் பயணிப்பதற்கு முன்பே, இது குறித்து திட்டமிடவில்லையா? போன்ற கேள்விகளும் இந்த தருணத்தில் எழுகிறது. அதேசமயம், பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானம், நம் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பை சோதிக்க ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அசாதாரணமானது அல்ல

திசைமாறி சென்ற விமானத்தை, நம் விமானப் படையின் வான் பாதுகாப்பு வலையமைப்பான ஐ.ஏ.சி.சி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, தீவிரமாக கண்காணித்து திசைதிருப்பலை எளிதாக்கியுள்ளதால், இந்த சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் பயிற்சியில் இருக்கும்போது, அவசர திசைதிருப்பல் அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, ஒரு விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் சிக்கிக் கொள்வது என்பது அசாதாரண நிகழ்வு அல்ல. அதனாலேயே, அதை எப்படியாவது பழுது நீக்கி எடுத்துச் செல்லும் முயற்சியை பிரிட்டன் விமானக் குழு மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்திய விமானப் படையும் உதவி வருகிறது. விமானம் குறித்த முழு புரிதலை, அமெரிக்க நிறுவனம் பிரிட்டனுக்கு தெரிவிக்காததும், சிக்கலை தீர்க்க முடியாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இருந்தாலும், 10 ஆண்டுகளில், எப் - 35 ரக விமானம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம் என வரலாறு கூறுகின்றன. விபத்துகள், தோல்விகள் என பல்வேறு சிக்கல்களையும், இந்த விமானம் சந்தித்தது தொடர்கதையாகவும் இருந்துள்ளது. அதேசமயம், இந்த ரக விமானம் பழுதடைந்தால், மீண்டும் பறக்க முடியாத நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என, அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விமானத்தின் உதிரி பாகங்களின் விலையோ அதிகம்; கிடைப்பதும் அரிது என்பதால், என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும், இதுபோன்ற பின்னடைவுகள் எப் - 35 விமானத்தில் உள்ளன. அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்திய படைகள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், தற்போது தரையிறங்கியுள்ள எப் - 35ன் நிலையை நாம் உற்று நோக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகையால், பல பிரச்னைகளை உள்ளடக்கிய எப் - 35, நம் விமானப் படைக்கு ஏற்றதா என்பது யோசிக்க வேண்டிய விஷயமே. - டாக்டர் எம்.மாதேஸ்வரன்ஏர் மார்ஷல், இந்திய விமானப்படை - ஓய்வு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anand
ஜூலை 12, 2025 17:14

வான்வழி எதிர்ப்பு சாதனங்கள் இல்லாத நாடுகளிடம் வீரத்தை காட்டும் விமானம் இது...


JaiRam
ஜூலை 12, 2025 15:10

இது ஒரு குப்பை வகை அமெரிக்கர்கள் உல்லாச வாழ்க்கைக்கு பிறநாட்டினரிடம் விடும் போலி கதை , அப்படியென்றால் உக்ரைன் நாட்டிற்கு கொடுத்து ரஷ்யவிற்கும் உள்ளே சென்று குகுண்டு போடலாம், ஆனால் ரஷ்யவிற்கு உள்ளே சென்றால் திரும்பாது எனஅமெரிக்கா அண்ணனுக்கு தெரியும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:08

[நவீனமயமான ஆயுதங்களையும் தன்னிடத்தே மறைத்து வைத்து, தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தும் வித்தையையும் இந்த விமானம் கற்றுள்ளது.] ஹாஹ்ஹாங் >>>> ஹையோ .... ஹையோ .... ஹையோ ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:07

சீனா பாகிஸ்தானை ஏமாத்தி தலையில கட்டுது ..... அதே போல அமெரிக்காவுக்கு இந்தியா மற்றும் பல நாடுகள் >>>>


Senthoora
ஜூலை 12, 2025 06:34

அடி தள்ளுபடி, அக்ஷயதிதி என்று நகைக்கடையில் பழைய நகை, பழையடிசயின், புடவை கடையில் பழைய மடல்காலை ஸ்பெசல் offer, சீக்கிரம் காலாவதியாகும் பொருள்களை தள்ளுபடி விலையில் விக்கிறாங்க, அதே பழைய மொடல் விமானங்களை விட்டுவிட்டு புதிய கண்டுபிடிப்புக்கு அதை முதலீடு செய்யுறாங்க. என்ன கடைசியில் அந்த விமானத்தில் பறந்து ஒரு அப்பாவியின் தலையில் உண்டை போடுவாங்க. பிறகு ஓர்நாள் 150 டாலர் Drone ஆல் சுட்டு விழுதப்படும். இப்போ யுத்தகளத்தில் இதுதான் நடக்குது.


Nagendran,Erode
ஜூலை 12, 2025 07:24

ஏலே இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற கமல் தேவலாம் போல...


Senthoora
ஜூலை 12, 2025 15:05

நாகேந்திரன் அவர்களே, இப்போ உக்ரேன் ரஷிய, இஸ்ரேல் ஈரான் போர்க்களத்தை நோக்குங்க, இஸ்ரேல், அமெரிக்க விலை உயர்ந்த ஆயுதங்கள், ஈரானின் சிறிய ரக ஏவுகணைகளை கொண்டு வீழ்த்திவிடுத்து, இந்தியாவில் என்ன இல்லை, செவாய்க்கிரகம்வரை அனுப்பும் திறன் இருக்கு, இந்தியாவிலே குறைந்த விலையில் நுணுக்கமா செய்யம்திறன் உள்ளவர்கள் இந்தியாவில் இருக்கிறாங்க. இந்தியாவிலே செய்யலாமே.


புதிய வீடியோ