சென்னை: “முந்தைய அ.தி.மு.க., ஆட்சியை விட, தி.மு.க., ஆட்சியில் கடன் வளர்ச்சி சதவீதம் குறைவு,” என, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கே.பி.முனுசாமி: தமிழகம் 2030ல், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சி அடையும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 2030ல், 1 டாலரின் மதிப்பு, 100 ரூபாயாக இருக்கும். அப்படியெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில், 100 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும். ஆண்டுக்கு, 37.5 சதவீத வளர்ச்சி இருந்தால் தான் இது சாத்தியம்.பட்ஜெட் தாக்கலுக்கு பின் பேட்டியளித்த நிதித்துறை செயலர், 'இந்த நிதியாண்டில், 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இருக்கிறோம். வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் தான் தமிழகம் கடன் வாங்கியுள்ளது. எனவே, கடன் வாங்குவதில் தவறில்லை' என்று கூறியிருக்கிறார்.கொரோனா நெருக்கடியில் வருவாய் குறைந்து, செலவு அதிகரித்த போதும், 2021ல் அ.தி.மு.க., ஆட்சி முடியும் போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால், இப்போது, தி.மு.க., ஆட்சியில், நான்கு ஆண்டுகளில், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரி, கட்டணங்களை விதித்து வருவாய் ஈட்டப்பட்டுள்ளது; கடனும் அதிகம் வாங்கியுள்ளீர்கள். ஆனால், எந்த புதிய திட்டமும் வரவில்லை.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: அடிப்படையில் வலுவான பொருளாதார கட்டமைப்பு உடைய மாநிலம் தமிழகம். தமிழகத்தின் வளர்ச்சி, 14.7 சதவீதம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம். 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்பது, எட்ட முடியாத இலக்கு அல்ல. இத்தனை லட்சம் கோடி ரூபாய் கடன் என, வெறும் எண்களை பார்க்கக்கூடாது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், எத்தனை சதவீதம் கடன் வாங்கப்பட்டுள்ளது என்றுதான் பார்க்க வேண்டும். மத்திய அரசின் கடன், 181.74 லட்சம் கோடி ரூபாய். அமெரிக்காவின் கடன், 3,149 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்தின் கடன், 8.30 லட்சம் கோடி ரூபாய். அதிக கடன் இருப்பதால், அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமானது என்று சொல்ல முடியுமா?அ.தி.மு.க., ஆட்சியில், 2011 முதல் 2016 வரை, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கடன் வளர்ச்சி சதவீதம், 108 ஆக இருந்தது. 2016 -- 2021 வரை, 4.80 லட்சம் கோடி ரூபாய். கடன் வளர்ச்சி, 128 சதவீதம். இப்போது தி.மு.க., ஆட்சியில், 9.30 லட்சம் கோடி ரூபாய். கடன் வளர்ச்சி, 93 சதவீதம் மட்டுமே. அ.தி.மு.க., ஆட்சியில் தான் அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: 2011ல் தி.மு.க., ஆட்சி முடியும் போது, 1.14 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கொரோனா காலத்தில் அரசின் வருவாய் நின்றது. கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளில், மாநில அரசின் வருவாய் அதிகரித்துள்ளது. இருந்தும், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டங்கள் எதுவும் வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழக மக்களை கடனாளி ஆக்கிவிட்டதாக, தி.மு.க., குற்றஞ்சாட்டியது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதிக கடன் வாங்கியுள்ளீர்கள். இதைத்தான் கேட்கிறோம்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: மூலதன செலவுகளுக்காகவே கடன் வாங்க வேண்டும் என்ற நியதியை, தி.மு.க., அரசு கடைபிடித்துள்ளதா?நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசுடன் சமரசமாக சென்றதால் முழுமையாக நிதி கிடைத்தது. இப்போது, மாநில உரிமைக்காக போராடுவதால், மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது. அதை ஈடுகட்ட கடன் வாங்குகிறோம்.கடன் வாங்கிய பணத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துகிறோம். சமூக நலத் திட்டங்கள் அனைத்தும், வெறும் செலவு அல்ல. அது, சமூக மூலதனம். நிதிக்குழு நிர்ணயித்த அளவுக்குள் தான் கடன் வாங்குகிறோம். வாங்கிய கடனை, முறையாக மக்கள் வளர்ச்சிக்கு செலவிடுகிறோம்.அமைச்சர் வேலு: அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் தான் மூலதன செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., அரசு, 2 லட்சத்து 25,815 கோடி ரூபாய் மூலதன செலவு செய்துள்ளது. வறுமையை ஒழிக்க, சமுக நலத்திட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும். அதற்கு கடன் வாங்கிதான் ஆக வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.