உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தகவல் கேட்டால் இ-மெயிலில் ஓ.டி.பி., அனுப்புவதா? ஆர்.டி.ஐ., சட்டத்தை நீர்க்கச் செய்ய திட்டம்

தகவல் கேட்டால் இ-மெயிலில் ஓ.டி.பி., அனுப்புவதா? ஆர்.டி.ஐ., சட்டத்தை நீர்க்கச் செய்ய திட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓ.டி.பி., நடைமுறையால் பயனாளர்கள் தங்கள் கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. அச்சட்டம் நீர்த்துப் போக அதிக வாய்ப்புள்ளது.தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) உதவி கோட்டச் செயலாளர் ராம்குமார் கூறியதாவது: ஆர்.டி.ஐ., சட்டம், அரசின் பல்வேறு துறைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்பட்டது.பணியாளர், பயிற்சி துறையின் கீழ் செயல்படும் இச்சட்டம் பிரதமர் மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மூலம் அரசிடம் தகவல் பெற விரும்புவோர் ரூ.10 கட்டணம் செலுத்தி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைத் தலைமைக்கு கேள்விகளை அனுப்பினால் 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். இணையதளத்தில் பதிவு எண், அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து கேள்விகளின் நிலை, பதில் ஆகியவற்றை அறியலாம்.

2025 ஜன. 1 முதல் ஆர்.டி.ஐ., இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளின் நிலையை தெரிந்து கொள்ள இமெயில் முகவரி மூலம் ஓ.டி.பி., பெறும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கி உள்ளிட்ட மற்ற துறைகளில் அலைபேசியில் ஓ.டி.பி., பெறும் வசதி உண்டு. தாமதமானாலும் குறிப்பிட்ட நொடிகள் கழித்து மறுபடியும் ஓ.டி.பி., பெறும் வசதி கிடைக்கும். தற்போது ஆர்.டி.ஐ., தளத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முறையில் இமெயில் முகவரிக்கு ஓ.டி.பி., அனுப்பப்படுகிறது. ஆனால் எப்போது வரும் எவ்வளவு நேரம் ஆகும் என்ற தெளிவான விளக்கம் இல்லை.ஓ.டி.பி.,யும் 3 நாட்கள் வரை வரவில்லை. நாம் கேட்ட கேள்விகளின் நிலை என்ன என்பது குறித்து அறிய முடிவதில்லை. இமெயில் முகவரி இருப்பவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்பதாலும் இச்சட்டம் நீர்த்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜன 10, 2025 09:07

இவிங்க ஆட்சியில் மக்கள் குறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கறதில்லை. ஆனா வெப்சைட்டுக்குப்.போனால் நூறு ஐ.ஏ.எஸ் ஆப்புசர்கள் பேர், போன் நம்பர், இமெயிலோட இருப்பாய்ங்க. ஒரு பய பதில் போட மாட்டான். கடைசியா ஒரு கழிசடை இந்தியில் ஆப் கி கம்ப்ளைண்ட் ரிசால் ஹோகயா ந்னு பதில்.போட்டு கேசை இழுத்து மூடும். இதுதான் எனக்கு நடக்குது.


subramanian
ஜன 10, 2025 08:52

அதிகாரிகள் அரசுக்கு எதிராக செயல்படும் நிலையில் இதுதான் நடக்கும். தவறான முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் விலக்க பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை