சைபர் மோசடி கும்பலிடம் ரூ.66 ஆயிரம் இழந்த 4 பேர்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் 66 ஆயிரம் ரூபாயை இழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செயது அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இதைநம்பிய மோகன்ராஜ், மர்மநபர் தெரிவித்த வர்த்தகத்தில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, அவருக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்கை முடித்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அப்போது, அவர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதபோல், திருக்கனுாரை சேர்ந்த வினோத், 29 ஆயிரத்து 500 ரூபாய், சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த ரமேஷ், 8 ஆயிரத்து 500 ரூபாய், மாகேவை சேர்ந்த ராக்கி, 3 ஆயிரம் என மொத்தம் 4 பேர் 66 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.