திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினி மகள் சிறப்பு வழிபாடு
காரைக்கால் : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வருகை தந்த நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா, குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து, சிறப்பு பூஜை செய்தார்.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு, நேற்று முன்தினம் மாலை நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வருகை தந்தார். அவரை, கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.தொடர்ந்து அவர், தர்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை செய்தார். ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும், அர்ச்சனை செய்து வழிபட்டார். முன்னதாக ஐஸ்வர்யா, கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் மடத்திற்கு சென்று ஆசி பெற்றார்.
வேட்டையன் வெற்றி பெற வழிபாடு
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும், அக்.10ல் திரைக்கு வர உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டி, ஐஸ்வர்யா, சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.மேலும், ரஜினிகாந்த் தற்போது ஏழரை சனிப்பெயர்ச்சி ஆதிக்கத்தில் உள்ளதாகவும், இது, அடுத்த சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், சனீஸ்வர பகவான் கோவிலில் ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.