கணவன், மனைவி மீது தாக்குதல்; மூன்று பேர் மீது போலீசார் வழக்கு
புதுச்சேரி ; கவுண்டன்பாளையத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய, தம்பதி மற்றும் மகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி கவுண்டன்பாளையம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா, 39; கடந்த 1ம் தேதி பிரியாவிற்கு உடல் நிலை சரியில்லாததால், ஆட்டோவில் மருத்துவமனை சென்று இரவு வீடு திரும்பினர். பின்பு, வழுதாவூர் சாலை வேலைவாய்ப்பகம் அலுவலகம் அருகில் ஆட்டோவை நிறுத்தியபோது, அங்கு வந்த கவுண்டன்பாளையம், மருதம் நகர், பாரி வீதியைச் சேர்ந்த செல்வம், ஆட்டோவை ஓரமாக நிறுத்த கூடாதா என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அதன்பின்பு, செல்வம் அவரது மனைவி மாரியம்மாள், மகள் தீபிகா ஆகியோருடன் பாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து ஆபாசமாக திட்டி செங்கல்லால் தாக்கினர். இதில், பிரியாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. பிரியா கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். உடல்நிலை சரியில்லததால் கால தாமதமாக நேற்று முன்தினம் கோரிமேடு போலீஸ் நிலையம் வந்து பிரியா புகார் அளித்தார். போலீசார் செல்வம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் தீபிகா மீது தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.