தொழிலாளி மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு பதிவு
புதுச்சேரி : தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி சஞ்சீவி நகர், திரவுபதியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், 35; ஆசாரி. இவருக்கும், ஆலங்குப்பத்தை சேர்ந்த ராஜதுரைக்கும் இடையே, முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 28ம் தேதி, சஞ்சவி நகரில் இறந்த வடிவேல் என்பவரின் இறுதி ஊர்வலத்தில், வெங்கடேசன் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ராஜதுரையின் அண்ணன் பூபாலன், உறவினர்கள் மணிகண்டன், துரைசாமி, மோகன் ஆகியோர், குடிபோதையில் வெங்கடேசனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.இதனை தட்டிக்கேட்ட, வெங்கடேசனின் உறவினர் மதுரகவி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார், பூபாலன், மோகன், மணிகண்டன், துரைசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.