பாப்ஸ்கோ நிறுவனம் 3 வாரத்திற்குள் நிலுவை தொகையை செலுத்த உத்தரவு
புதுச்சேரி: பாப்ஸ்கோ நிறுவனம், பட்டாசு ஆலைக்கு மூன்று வராத்திற்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியின் கூட்டுறவு நிறுவனமான, பாப்ஸ்கோ நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு நடத்திய சிறப்பு அங்காடிக்கு, சிவகாசியை சேர்ந்த பட்டாசு தயாரிப்பு ஆலையிடம் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கி இருந்தது. அதில் ஆலை நிர்வாகத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருந்தது. இது குறித்து ஆலை நிர்வாகம், பாப்ஸ்கோ நிறுவனத்தின் மீது, ஸ்ரீவில்லிபுத்துார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பாப்ஸ்கோ நிறுவனம் 35.32 லட்சம் ரூபாயை ஆலை நிர்வாகத்திற்கு செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், பாப்ஸ்கோ சார்பில் பணம் தரப்படவில்லை. இதனை தொடர்ந்து, ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, புதுச்சேரி கோர்ட் பாப்ஸ்கோ அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, தட்டாஞ்சாவடியில், உள்ள பாப்ஸ்கோ சொத்துக்களை கோர்ட் கட்டளை நிறைவேற்றுனர்கள் ஜப்தி செய்ய நேற்று முன்தினம் வந்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில், அவர்கள் திரும்பி சென்றனர். இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மூன்று வாரத்திற்குள் பாப்ஸ்கோ நிறுவனம், பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் ஜப்தி நடவடிக்கை தொடரும் என, உத்தரவிட்டார்.